தன்னை ஏமாற்றியவரை, மன்னிப்பதை விட பழிவாங்குவதையே மனிதர்கள் அதிகம் விரும்புவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 184 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு வெவ்வேறு வகையான சிறுகதைகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் 15 கதைகளைப் படித்தனர்.
முடிவில் அவர்களிடம் ஒவ்வொரு கதை குறித்தும் அதில் வழங்கப்பட்டுள்ள தீர்வு குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. அதில், மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மன்னிப்பு கதைகளை விரும்பவில்லை. மாறாக, ஏமாற்றியவர்களுக்கு மன்னிப்பை விட சரியான தண்டனை கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் ஏமாற்றுபவர்களின் செயலுக்கு ஏற்றவாறு சமமான தண்டனையை அளிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
சில கதைகளை மக்கள் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் பார்க்கின்றனர். சில விஷயங்களில், தவறு செய்தவர்கள் மன்னிக்கப்படுவதைக் காட்டிலும் அவர்கள் தண்டனையைப் பெறும்போது பாதிக்கப்பட்டவர்கள் அதனை ரசிக்கின்றனர்.
சில நபர்கள் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் சிலர் மன்னிக்கப்பட்ட கதைகள் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே மன்னிப்பு கதைகளை பாராட்டி அவர்களது மன்னிக்கும் குணத்தை வெளிப்படுத்துகின்றனர்.
'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் கதைகளை நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் தகுதியான தண்டனையைப் பெறும்போது அதனை நாங்கள் ரசிக்கிறோம்' என்று பங்கேற்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், 'ஒரு தவறுக்கு எவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் வித்தியாசமான பதிலைக் கொண்டுள்ளனர், மேலும் ஒரு கதை அவர்கள் எதிர்பார்ப்பதை வழங்கும்போது, அவர்கள் பெரும்பாலும் விரைவாக பதிலளிப்பார்கள். தண்டனை குற்றத்திற்கு பொருந்தாதபோது,பங்கேற்பாளர்கள் வெறுப்புடன் பதிலளித்தனர்' என்றும்,
பழிவாங்கலிலும் நியாயமான பழிவாங்கல் இருக்க வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.