பிரபல பாலிவுட் நடிகை டயானா பெண்டி கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான காக்டெயில் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர். முன்னதாக, 2005 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பாலிவுட் நடிகை டயானா பெண்டி, ஃபேஷன் ஷோக்கள் தனக்கு மிகவும் விருப்பமானவை என்றும் தற்போது அதனை இழப்பது வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.
எனினும், 'காக்டெய்ல்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அந்தப்படத்தில் நடித்தது தனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை, மாடலிங்கை விட நடிப்பு மிகவும் சவாலானது. ஏனென்றால், ஒவ்வொரு படத்திலும் புது விஷயங்களை முயற்சிக்க வைக்கும். நான் என்னையே சவாலாக நினைக்கிறேன். மீண்டும் எனது மாடலிங் துறைக்கு முழுவதுமாக செல்ல முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. எனினும், முயற்சிப்பேன். சவாலான நடிப்புத் துறையிலும் சாதனைகள் செய்வேன்.
நியூயார்க் பேஷன் வீக்கில் நிகழ்ச்சிகளை நடத்துவது மிகப் பெரியது. அந்த நாட்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
'ஷிதாட்' படப்பிடிப்பில் இருக்கிறேன். இது ஒரு தீவிரமான காதல் கதை. இதற்கு முன்பாக காதல் கதையில் நான் முயற்சித்தது இல்லை. எனவே, இதுபோன்ற ஒரு கதையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
'காக்டெய்ல்' படத்திற்குப் பிறகு நான் மீண்டும் மடோக் அணியுடன் இணைந்து பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்தார்.