'சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்றுவது அவசியம்'

கரோனா தொற்றைத் தடுப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பரவலைக் குறைப்பதற்கு சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிப்பது அவசியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்று இன்னும் பெரும்பாலான பகுதிகளில் தீவிரமாகத்தான் இருக்கிறது. ஆனால், பொருளாதாரம், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல காரணங்களினால் பாதிப்பு குறைவான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

இந்தியாவைப் பொறுத்தவரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்த நிலையில், மக்கள் தங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். அநேக மாநிலங்களில் பொதுப் போக்குவரத்துகூட மீண்டும் துவங்கப்பட்டு விட்டது. 

இந்நிலையில், பொது இடங்களில் செல்லும்போது, பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது கரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் மருத்துவ தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

நீங்கள் வெளியே செல்கிறீர்கள் என்றால், எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த எழுத்தாளர் சுனில் சாலமன் கூறுகிறார். 

இதுதொடர்பான ஆய்வில், மேரிலாந்து பகுதியைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்டோரின் மாதிரிகளை ஆய்வு செய்ததுடன், முன்னதாக அவர்கள் பொது இடங்களில் எவ்வாறு சமூக இடைவெளியை கடைபிடித்தனர், தொற்றில் இருந்து பாதுகாக்க என்னென்ன தடுப்பு முறைகளை கையாண்டனர் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. 

இதில், மற்றவர்களைவிட, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியவர்களுக்கு 4 மடங்கு அதிகமாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், மிகவும் குறைவான சமூக இடைவெளியை கடைபிடித்ததே தொற்று ஏற்படக் காரணமாக இருந்தது. அதேநேரத்தில் போதுமான சமூக இடைவெளியை கடைபிடித்தவர்களில் 10ல் ஒரு பகுதியினருக்கு மட்டுமே தொற்று இருந்தது. மொத்தமாக 1,030 பங்கேற்பாளர்களில் 55 (5.3%) பேருக்கு தொற்று ஏற்பட்டது. இரண்டு வாரங்களுக்கு பின்னர் 18 (1.7%) பேர் தொற்றுக்கு ஆளாகினர். 

எனவே, அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு முறைகள் கரோனா பாதிப்பை குறைக்க உதவும் என்றும் நிலைமை முழுவதுமாக சரியாகும்வரை மக்கள் இதனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com