குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 67 வயதில் பிஹெச்.டி பட்டம் பெற்று தன்னுடைய கனவை நனவாக்கியுள்ளார்.
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் உஷா. இவருக்கு தற்போது 67 வயது ஆகிறது. இவருக்கு 20 வயதில் திருமணம் நடந்துள்ளது. சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்பது அவரது கனவாக இருந்துள்ளது. திருமணத்திற்குப் பின் படிக்க வேண்டும் என்று முயன்றும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை.
இதையடுத்து சமீபத்தில் அவரை படிக்க ஊக்குவித்துள்ளார் உஷாவின் மருமகள். அவர் கொடுத்த ஊக்கத்தில் உஷா பிஹெச்.டி முடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'நான் திருமணம் செய்து கொண்டபோது கல்லூரி பட்டப்படிப்பு முதல் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். நான் டாக்டராகவே விரும்பினேன். திருமணத்திற்குப் பிறகு நான் எனது படிப்பைத் தொடர வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினர். ஆனால் என்னால் தொடர முடியவில்லை. மாறாக, என் குடும்பத்தின்மீது கவனம் செலுத்தினேன்.
பின்னர் மகாராஷ்டிரத்தின் சத்ருஞ்சய் அகாடமியில் சமண மதம் குறித்த பட்டப்படிப்பு இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இது ஆன்லைன் படிப்பாக இருந்தது எனக்கு வசதியாக இருந்தது. இளங்கலை முதலாம் ஆண்டில் சேர்ந்தேன். பின்னர் முதுகலையும் முடித்து நான் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பி.ஹெச்டியில் அனுமதி கிடைத்தது. அதன்படி பிஹெச்.டி முடித்துவிட்டேன்' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இப்போது அவர் தன்னுடைய பேரக்குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். 'வாழ்க்கையில் முதலில் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். பின்னர் தைரியத்தை இழக்காமல் கடினமாக உழைத்தால், ஒருநாள் கண்டிப்பாக நிச்சயமாக இலக்கை அடைய முடியும்' என்று கூறும் அவர் தன்னுடைய இலக்கை எட்டுவதற்கு மருமகள் உதவியதாகக் கூறுகிறார்.
மருமகள் நிஷா லோடயா இதுகுறித்து, தான் ஒரு பெருமைவாய்ந்த மருமகள் என்கிறார். மேலும், 'தன்னுடைய மாமியார் உஷா ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு மணி நேரம் படித்து வந்தார். குடும்பத்தின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை என்றால், இந்த இலக்கை அடைவது கடினமாக இருந்திருக்கும். அவரது கணவர் இன்று இந்த உலகில் இல்லை. ஆனால், என்னுடைய கணவரும் நானும் சேர்ந்து அவருடைய ஆசையை நிறைவேற்ற ஊக்கப்படுத்தினோம். அதன்படி அவர் சாதித்தும்விட்டார் என்றார்.