பழங்கள் சாப்பிட்டா மன அழுத்தம் வராதாம், ஆய்வில் கண்டுபிடிப்பு
தொடர்ந்து பழங்கள் சாப்பிட்டு வருபவர்களுக்கு மன அழுத்தம் என்பது குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆஸ்டன் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் தினசரி பழங்கள் சாப்பிட்டு வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. பழங்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மற்றும் மன நலத்திற்கு நல்லது எனவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல நொறுக்குத் தீனி வகைகளை சாப்பிடுபவர்களும் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். நொறுக்குத் தீனிகளை உண்பவர்களுக்கு குறைந்த ஊட்டச்சத்துக்களே கிடைக்கிறது. அதனால் அவர்களுக்கு அதிக அளவு மன அழுத்தம் மற்றும் கவலை போன்றன ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் லண்டன் முழுவதிலும் இருந்து 428 பேர் கலந்து கொண்டனர். ஆய்வின் முடிவுகள் லண்டனின் ஊட்டச்சத்துக்கான பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் பழங்கள், இனிப்பு வகைகள், நொறுக்குத் தீனிகள் உண்பவர்கள் பங்கேற்றனர். பழங்கள் அதிக அளவில் உண்பவர்களுக்கு குறைந்த அளவில் மன அழுத்தம், கவலை மற்றும் உடல் நலம் போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிந்தது. அதேவேளையில், அதிக அளவில் நொறுக்குத் தீனிகள் உண்பவர்களுக்கு இதற்கு மாறாக உடல் நலக் குறைபாடு, கவலை மற்றும் மன ஆரோக்கியம் போன்றவற்றில் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்தது.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. ஆனால், சமைப்பதன் மூலம் இந்த ஊட்டச்சத்துகள் குறைகின்றன. அதனால், அவற்றிலிருந்து கிடைக்கும் நுண் ஊட்டச்சத்துகளும் குறைகின்றன. காய்கறிகளை சமைக்காமல் அப்படியே உண்பதன் மூலம் அதிலிருக்கும் சத்துகள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்கின்றன. அது நமது உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.
இந்த ஆய்வின் முடிவில் நமது அன்றாட வாழ்வில் அதிக அளவில் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.