மறதி அதிகமாக இருக்கிறதா? இதைச் செய்யலாமே
By DIN | Published On : 16th May 2023 05:45 PM | Last Updated : 16th May 2023 05:45 PM | அ+அ அ- |

இந்துக்களின் வழிபாட்டு முறையான தோப்புக்கரணம் கூட அறிவியலுடன் தொடர்புடைய, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் ஒன்றுதான்.
கோயிலுக்குச் சென்றதும், அங்குள்ள விநாயகர் சன்னதி முன்பு நின்று தோப்புக்கரணம் போட்டுக் கொள்வதை ஒரு வழிபாட்டு முறையாக நம் மூதாதையர் செய்துள்ளனர். இதனால் நமக்கு ஞாபக சக்தி தூண்டப்படுகிறது.
அதாவது, ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காது மடல் வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது. எனவே, இரண்டு காதையும், கைகளை மாற்றிப் பிடித்து தோப்புக் கரணம் போடும் போது தானாகவே நமது காதுகள் இழுபட்டு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், நமது நினைவாற்றல் நிச்சயமாக அதிகரிக்கும்.
முன்பெல்லாம் படிக்க ஆரம்பிக்கும் போது, முதலில் விநாயகரை கும்பிட்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டு வந்து படி என்று பெரியவர்கள் சொல்வார்கள். இதிலும் மேற்கூறிய சூட்சுமம்தான் ஒளிந்திருக்கின்றது.
இது மட்டும் அல்ல.. வகுப்பறையில் பாடம் படிக்கும் போது ஏதேனும் கேள்விக்கு பதிலை மறந்து விட்டால், ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து திருகினார்கள். அது வெறும் காதை பிடித்து திருகும் தண்டனை அல்ல. காதை அப்படியே திருகாமல், சற்று இழுத்து திருகும் போது நினைவுத் திறனுக்கான நரம்புகள் தூண்டப்பட்டு, அதன் மூலம் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் வகையில் அமைந்திருப்பதே காதை திருகும் தண்டனை.
எனவே, இனி விநாயகரைப் பார்த்ததும் தோப்புக் கரணம் போட மறக்கக் கூடாது. ஏன் எனில் அது உங்களது நினைவுத் திறனை அதிகரிக்கும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...