மாரடைப்பு vs அசிடிட்டி: கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்னென்ன?
By DIN | Published On : 06th September 2023 06:16 PM | Last Updated : 06th September 2023 06:16 PM | அ+அ அ- |

நெஞ்சு வலி என்பது அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சலாகவோ அல்லது மாரடைப்பு போன்ற பெரிய பிரச்னையின் அறிகுறியாகவோ இருக்கலாம். இரண்டுக்குமான வித்தியாசத்தை கண்டுபிடிப்பது கடினம்தான். இருப்பினும் இதன் அறிகுறிகளில் வேறுபாடு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பு ஒரு 'சைலன்ட் கில்லர்' என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஏற்படுவதற்கு முன்னதாக அரிதாகவே அறிகுறிகள் ஏற்படுகிறது.
அமைதியான அறிகுறிகளற்ற மாரடைப்பு (SMI- silent myocardial infarction) ஏற்படுவது 45 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. மேலும் இது பெண்களைவிட ஆண்களை அதிகம் தாக்குகிறது. அப்போது சில நேரங்களில் அமிலத்தன்மையை (அசிடிட்டி) உணரலாம் அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம்.
பலரும் நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவதை இரைப்பை பிரச்னைகளுடன் தொடர்புபடுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகுவதில்லை. இதனால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் குறைந்தது 1.8 கோடி இறப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க | தென் மாநிலங்களில் குறையும் கருத்தரிப்பு விகிதம்! காரணங்கள் என்னென்ன?
மாரடைப்பு vs அசிடிட்டி
அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படும்போது நெஞ்சு எரிவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. மாரடைப்பும் அப்படித்தான். ஆனால், சில அறிகுறிகளை கண்காணிப்பதன் மூலமாக இரண்டையும் வேறுபடுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
♦ அசிடிட்டி என்றால் நெஞ்சின் மேல் பகுதி கனமாகத் தோன்றும். வாய் புளிப்பு அல்லது கசப்புத் தன்மை கொண்டிருக்கும்.
♦ அசிடிட்டி ஏற்பட்டால் வயிற்றில் உள்ள உணவு கொஞ்சமாக மேலெழும்பி வரும்.
♦ ஆனால், மாரடைப்பு எப்போதுமே மார்பு வெடிப்பது போன்ற ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும். மார்பிலிருந்து தோள்பட்டை, கழுத்து, தாடை மற்றும் முதுகு வரை வலி ஏற்படும்.
♦ மேலும், மாரடைப்பு ஏற்பட்டால் மூச்சுத் திணறல் வரும். உடனே வியர்வை, தலைச்சுற்றல் ஏற்படும். இந்த அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.
♦ எங்கு வலி ஏற்படுகிறது என புரிந்துகொள்ள முடியாது. ஆனால் மார்பின் நடுவில் ஒரு அசௌகரியத்தை உணர்ந்தால் அது மாரடைப்புதான் என்கின்றனர்.
எப்போது என்ன செய்ய வேண்டும்?
உடற்பயிற்சி செய்தாலோ அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்தபின்னரோ அல்லது எந்த சூழ்நிலையிலும் மார்பில் வலி உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
செரிமான பிரச்னைகள் மார்பு வலியை ஏற்படுத்துமா?
உங்கள் உணவுக்குழாயில் ஏற்படும் தசைப்பிடிப்பு, நெஞ்சு வலியை ஏற்படுத்தலாம். கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பிறகு, பித்தப்பையில் ஏற்படும் வலி, மார்பில் பரவி, கடுமையான குமட்டல், வயிற்றின் மேல் பகுதி அல்லது வலது பக்கத்தில் வலியை ஏற்படுத்தலாம். இந்த வலி தோள், கழுத்து அல்லது கைகள் வரை பரவலாம். உறுதியாக தெரியவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் படிக்க | வயதானாலும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த 10 உணவுகளைச் சாப்பிடுங்கள்!

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...