வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

வெறும் வயிற்றில் சுத்தமான நெய்யை உட்கொள்வதினால் எண்ணற்ற பலன்களை நாம் அடையலாம்.
வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

இந்திய உணவுகளில் மிகவும் முக்கியத்துவமானது நெய். ஆயுர்வேத சிகிச்சைக்கு பெரும் பங்கு வகிக்கின்றது.

காலை எழுந்ததும் நம்மில் பெரும்பாலானோர் காபி, டீ அருந்துவது வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அது இல்லையெனில் எந்த வேலையும் ஓடாது. ஒரு சிலர் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன், தேன், எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் குடிக்கும் பழக்கமும் உண்டு. ஆனால், காலையில் எழுந்தவுடன் ஒரே ஒரு ஸ்பூன் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று உங்களுக்குத் தெரியுமா? வாங்க விரிவாகப் பார்ப்போம்.

என்னென்ன சத்துக்கள் உள்ளன?

நல்ல தரமான நெய்யில் வைட்டமின் ஏ, டி, கே, ஈ அதிகளவில் உள்ளது. அதிலும் சில உணவு வகைகளில் மட்டும் உள்ள லினோலிக் அமிலம் நெய்யில் மிக அதிகளவில் உள்ளது. ஒரே ஒரு ஸ்பூன் நெய்யில் கிட்டதட்ட 112 கலோரிகள் உள்ளது. 0.04 கிராம் புரதம், ஒமேகா 3 கொழுப்பு 45 மி.கி, ஒமேகா 6 கொழுப்பு அமிலம் 2.7 மி.கிராம் உள்ளது. ஆனால் மொத்த கொழுப்பின் அளவு 14 கிராம் மட்டுமே.

ஒரு சிலர் நெய் என்றாலேயே பயப்படுவார்கள் வேண்டாம் பா உடல் எடை கூடிவிடும், மாரடைப்பு வரும் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால், நெய்யில் நல்ல கொழுப்பும் புரதமும் நிறைந்துள்ளது அதனால், உடல் எடை கூடாது. தேவையற்ற பிரச்னைகளை உண்டாக்காது.

வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதால்...

நெய் இரைப்பையில் அமில சுரப்பைத் தூண்டி சமநிலைப்படுத்த உதவுகிறது. இது செரிமான மண்டலத்தைச் சரிசெய்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. குடல்களுக்கு ஆற்றலைக் கொடுத்து, மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து விடுபட வைக்கிறது.

இதில் சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் உடலில் தசை வலிமையை அதிகரித்து உடலில் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கின்றது. வயதாக வயதாக எலும்புகள் தேய்மானம் அதிகரிக்கும். எலும்பு மஜ்ஜைகளில் உள்ள ஈரத்தன்மை குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாக 40 வயதுக்கு மேல் மூட்டு வலி வந்துவிடும். வெறும் வயிற்றில் நெய் எடுத்துக்கொள்வதினால் மூட்டு வலி, எலும்புகள் தொடர்பான நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

சரும வறட்சி உள்ளவர்கள் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாகக் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வீதம் நெய் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும செல்கள் உயிர்ப்பித்துப் பளபளக்கச் செய்யும். சுருக்கங்கள் மற்றும் முகப்பரு குறையும்.

தோலில் உள்ள மெலனின் உற்பத்தியை அதிகரிக்க நெய் மிகச் சிறந்த இயற்கைப் பொருளாக விளங்குகிறது. சருமத்திற்கு மட்டுமல்லாது பெண்களுக்கு அழகுத்தரும் தலைமுடியையும் இது பாதுகாக்கிறது. பெரும்பாலும் தலைமுடிக்குப் புரத உணவுகள் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. நெய்யில் அதிகளவில் புரதச்சத்து உள்ளதால், முடி உதிர்வதைத் தடுக்கிறது. 

வயிறு உப்பசம், வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு நெய் அருமருந்து. வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்துவர உடல் சூடு குறையும், குடல் புண்கள் ஆறும், அஜீரணத்தைப் போக்கி செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும். 

உங்கள் தினசரி உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வதால் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

நெய் உடலுக்கு மிகவும் நல்லது தான். ஆனாலும் அளவுக்கு அதிகப்படியாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அளவோடு சாப்பிட்டால் தான் அது மருந்து. கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், இதய பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உபயோகிக்கத் தொடங்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com