

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்று வேறு அர்த்தம் கொண்ட பழமொழி ஒன்று மருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்லி திருமணம் செய்பவர்களுக்கு பயன்பட்டு வந்துள்ளது.
ஆனால், தற்போது, மகாராஷ்டிரத்தில், மணமகனின் சிபில் ஸ்கோர் மோசமாக இருந்ததைக் காரணமாகச் சொல்லி, மணப்பெண் வீட்டார் திருமணத்தையே நிறுத்தியிருப்பது அட்ரா சக்கை என்பது போல உள்ளது.
திருமணத்தில் பொருளாதார நிலைமை என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவரது சொத்து நிலவரங்களை தெரிந்துகொள்வதைக் காட்டிலும் கடன் நிலைமையை தெரிந்துகொள்வதுதான் மிகவும் முக்கியம்.
அந்த வகையில், தற்போது மணமகனின் சிபில் ஸ்கோர், திருமணத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜாதகம் பார்த்து திருமணம் செய்த காலம் மாறி, சிபில் ஸ்கோர் பார்த்து திருமணம் செய்யும் காலம் வந்துவிட்டது.
மகாராஷ்டிரத்தில் திருமணத்தை உறுதி செய்யும் தருணத்தில் இருந்த மணமக்கள் வீட்டாருக்கு இந்த சிபில் ஸ்கோர் ரூபத்தில் வந்தது தலைவலி. பெண்ணின் உறவினர், மணமகனின் சிபில் ஸ்கோரைப் பார்க்க வலியுறுத்திய நிலையில் அது மிகவும் மோசமாக இருந்ததைப் பார்த்து மணமக்கள் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது, மணமகன் பல வங்கிகளில் ஏகப்பட்ட கடனை வாங்கியிருப்பதும், அதில் சில கடன்கள் கட்டாமல் நிலுவையில் இருப்பதும், சில தவணைகளை முறையாக கட்டாமல் அபராதம் செலுத்தியிருப்பதன் மூலம் சிபில் ஸ்கோர் குறைந்து இருந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் முர்திஸாபூரில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே மணமகள் மற்றும் அவரது குடும்பத்தாரின் பல எதிர்பார்ப்புகளால் இளைஞர்கள் திருமணமாகாமல் இருக்கும் நிலையில், இந்த தலைவலி வேறா என்று கலக்கமடைந்துள்ளதாக சமூக ஊடகக் கருத்துகள் மூலம் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.