

இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) கூறியுள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.6 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் நுரையீரல், வாய், மார்பகம், கருப்பை வாய், கருப்பை புற்றுநோய் ஆகியவை அடங்கும். இதுவே 2025ல் 15.7 லட்சமாக அதிகரித்துள்ளது. 2040 ஆம் ஆண்டில் 22.1 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குக்கூட சிறு வயதில் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 50,000 - 70,000 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புகையிலை பயன்படுத்துதல், ஆல்கஹால் நுகர்வு, உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் மாசு, ஹெச்பிவி போன்ற தொற்றுகள் இருப்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் தனது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.
தொடக்கத்திலேயே கண்டறிவதன் மூலமாக புற்றுநோயில் இருந்து மீள முடியும் என்றும் இதில் இருந்து தற்காத்துக்கொள்ள தொடர் பரிசோதனைகள் அவசியம் என்றும் புற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் உடற்பயிற்சி, சத்தான உணவு என வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிவதற்கான நவீன பரிசோதனை முறைகள் அதிகமிருப்பதாகவும் மக்கள் தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்வதன் மூலமாகவும் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாகவும் இதுதொடர்பான விளைவுகளைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர்.
புற்றுநோய் பாதிப்பில் இந்தியா உலக அளவில் 3 ஆம் இடத்திலும் ஆசியாவில் 2 ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2020ல் 8- 9 லட்சம் புற்றுநோய் இறப்புகள். பதிவாகியுள்ளன. புற்றுநோய்க்கு 40% காரணம் புகையிலை என்று அறியப்பட்டுள்ளது.
உடல் எடையை சரியாக நிர்வகிப்பது, உடற்பயிற்சி, டயட், மது மற்றும் புகையைத் தவிர்ப்பது, தேவையான தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது, சுற்றுச்சூழ மாசில் இருந்து முடிந்தவரை விலகியிருப்பது புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்கும் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிக்க | குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தாயின் மன அழுத்தம் தீர்மானிக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.