எரிபொருள் மூலம் வாகனங்கள் இயக்கப்பட்டன என்பது கடந்த கால வரலாறாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் வாகனங்களை மாற்ற உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.
பைக்குகள், கார்கள், பேருந்துகள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் மின் பேட்டரிகளால் நீண்ட தூரம் இயங்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதில் நிபுணர்கள் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 'நயன்பாட்' நிறுவனம், சிறு குழந்தைகள் விளையாடும் மூன்று சக்கர ஸ்கூட்டரில் பேட்டரி பொருத்தி எலக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கி உள்ளது. இது போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைச் 'ஷேர்' செய்யும் முறை (அதாவது ஓர் இடத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்து பயன்படுத்திவிட்டு எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் விட்டுவிட்டுச் செல்வது) அமெரிக்காவில் பிரபலமடைந்து வருகிறது. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைச் சார்ஜ் செய்வதுதான் பெரும் சவாலாக உள்ளது. இதற்கும் 'நயன்பாட்' நிறுவனம் தீர்வு கண்டுள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சார்ஜ் தீர்ந்து விட்டால் அவை தானாகவே சார்ஜிங் மையங்களுக்கும் செல்லும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் உதவியுடன் கணினியில் இருந்தபடியே இதனை இயக்கலாம்.
அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2020 -ஆம் ஆண்டு தொடக்கத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வரும் என்று நயன்பாட் நிறுவனம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.