ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பை அடுத்தாண்டு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுமையான தயாரிப்புகளைத் தனித்த அடையாளங்களுடன் வெளியிடும் ஆப்பிள் நிறுவனம் புதுமையான சிப்ஸ் , உணரிகள் , திரை வசதியுடன் தன்னுடைய புதிய ஹெட்செட்டை அடுத்தாண்டு வெளியிட இருப்பதாக மார்க் குர்மன் நியூஸ் லெட்டர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இயர்போன்களின் தேவையும் அதன் தொழில்நுட்பத் திறனும் அதிகரித்து வரும் நிலையில் விடியோ கேம்களை விளையாட ஏதுவாக ஏஆர், விஆர் வசதியுடன் புதிய ஹெட்செட்டை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
‘மிக்ஸுடு ரியாலிட்டி’ என்கிற பெயரில் அறிமுகமாகும் இந்த ‘ஹெட்செட்’ வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக இல்லாமல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் தொழில்முறை அதிகாரிகளுக்காகவும் தயாராகி வருகிறது.
இதுகுறித்து ஆப்பிள் ஆய்வாளரான மிங் ஜி கு , ‘பயனர்களை இணைக்கும் தொழில்நுட்பப் புரட்சியில் புதிய அலையாக இது இருக்கும் ‘ எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அடுத்து ஆப்பிள் ஹெட்செட்களில் ஏஆர் வசதியுடன் வெளியாகுபவைகளில் வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஹெட்செட் 15 கேமராக்களை உள்ளடக்கி கண்களை கண்காணிக்கும் வசதியுடன் 2000- 3000 டாலர் செலவில் உருவாக்கப்படுகிறது.
மேலும் உயர்தொழில்நுட்பத் திரையுடன் அணிபவர்கள் நீண்ட நேரம் சுற்றித் திரிவதற்கு வசதியாக எடை குறைந்ததாகவும் இந்த ஏஆர் ஹெட்செட் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,