முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஏஐ பிரிவைத் தொடங்கியுள்ள நிலையில், அதன் மென்பொருள் தயாரிப்பான விண்டோஸ் மற்றும் சாதனங்கள் தயாரிக்கும் சர்பேஸ் பிரிவு ஆகியவற்றுக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது.
பவன் தவுலூரி, இந்தியரான இவர் ஐஐடி பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை நிறைவு செய்தார்.
23 ஆண்டுகளுக்கு மேலாக மைக்ரோசாஃப்டில் பணியில் உள்ளார் பவன். முன்னதாக சர்பேஸ் கணினிகளில் ஏம்டி மற்றும் குவால்காம் ப்ரோசஸர்களின் இணைப்பில் பணியாற்றியுள்ளார்.
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் தலைவராக இருந்த பனோஸ் பனாய், கடந்த ஆண்டு அமேசானுக்கு சென்ற பிறகு இந்த பிரிவை இரண்டாக மாற்றி சர்பேஸுக்கு பவன் தவுலூரியை தலைவராகவும் விண்டோஸுக்கு மிகாயில் பராகினை தலைவராகவும் மைக்ரோசாப்ட் நியமித்தது.
இந்த நிலையில் சர்பேஸ் மற்றும் விண்டோஸ் இணைக்கப்பட்டு பவன் தலைவராக நியமிக்கப்பட்டதாக வெர்ஜ் இணையதளம் தெரிவித்துள்ளது.
சுந்தர்பிச்சை, சத்ய நாதெல்லா போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியர்களின் பட்டியலில் பவனும் தற்போது இடம்பெற்றுள்ளார்.