முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், புதன்கிழமை கூகுள் வேலட் செயலியை இந்தியாவில் அறிமுகமாகப்படுத்தியுள்ளது.
நாள்தோறும் தேவைப்படும் ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கி சேகரிக்க கூகுள் வேலட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
லாயல்டி கார்டுகள், திரையரங்க டிக்கெட்கள் மற்றும் நிகழ்ச்சி கடவுச்சீட்டுகள் ஆகியவற்றை கூகுள் வேலட்டில் இருந்து அணுக முடியும்.
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கூகுள் பே செயலி, பணம் அனுப்புதல் மற்றும் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. ஆனால் இப்போது அறிமுகமாகியுள்ள கூகுள் வேலட்டில் பண பரிவர்த்தனைகள் எதனையும் மேற்கொள்ள இயலாது.
தற்போது பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ், ஏர் இந்தியா, இண்டிகோ, பிளிப்கார்டு, பைன் லேப்ஸ், கொச்சி மெட்ரோ, அபிபஸ் உள்ளிட்ட 20 இந்திய நிறுவனங்கள் கூகுள் வேலட் உடன் இணைந்துள்ளன.
விமான பயணச்சீட்டுகளை கூகுள் வேலட்டில் பதிவேற்றம் செய்யும்போது அந்த விமானம் புறப்படுவது, நேர மாற்றங்கள், விமான நிலைய நுழைவாயில் மாற்றம் உள்ளிட்ட தகவல்களை கூகுள் வேலட் அளிக்கிறது.
மேலும், திரையரங்க டிக்கெட்கள், ஐபிஎல் டிக்கெட், ரயில் டிக்கெட் ஆகியவையும் கூகுள் வேலட்டில் சேர்த்து கொள்ள முடியும். ஜிமெயிலில் பெறுகிற நிகழ்வு குறித்த தகவல்கள் தானாகவே கூகுள் வேலட்டில் பதிவாகும்.
இன்னும் நிறைய பிராண்டுகளுடன் கைக்கோர்க்கவுள்ளது கூகுள். இனி நுழைவுச் சீட்டுகளே தேவைப்படாது போல.