சாயங்கால மயக்கம் - புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - தினமும் ஒரு கதை: சாயங்கால மயக்கம்
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன்

             எனது சொந்த ஊரிலிருந்து வந்து வெகு நாட்களாகிவிட்டது.

     ஊர் ஆசை என்பது கட்குடி மாதிரி ஒரு போதை வஸ்து. அந்த ஆசை வந்துவிட்டால் அதற்கு மாற்றுக் கிடையாது, போய்த்தான் தீரவேண்டும். இந்த ஊர்ப்பித்தம் காதலைப் பார்க்கினும், தேசபக்தி, கடவுள் பக்திகளைப் பார்க்கினும் மிகக் கொடூரமானது. அதன் ஏகச் சக்ராதிபத்தியம் மனத்தில் என்னென்ன கனவுகளையெல்லாம் எழுப்பும், தெரியுமா?

     அன்று சின்னப் பையனாக இருக்கும்பொழுது தோழனுடன் ஆற்றங்கரையில் சண்டைபோட்டது முதல், நான் முதலில் விடியற்கால ஸ்நானத்திற்குச் செல்லும் இன்பம் முதல், எல்லாச் சிறு அற்பச் சம்பவங்களும் - அடே, அதில் என்ன மோகம்!

     ஊருக்குப் போனேன்.

திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணி நதிக்கரையில் ஒரு சிறு கிராமம். சென்னையில் வசிப்பதால் ராஜீயக் கைதி சிறையில் அநுபவிக்கும் சிரமத்தையெல்லாம் தியாகம் செய்யாமல் அநுபவித்துவிடலாம். அதிலே ஊருக்குப் போக வசதி கிடைத்தது. இந்த உலகத்திலே கிறிஸ்து சொன்ன மோக்ஷ சாம்ராஜ்யம் கிடைத்துவிட்ட மாதிரியே இருந்தது.

     ரயில் ஏறுவதும், வண்டி போவதும், ஸ்தூலத்தில் நான் ஊரை அநுபவிப்பதும் நடப்பதற்குப் பல மணி நேரத்திற்கு முன்னமேயே நான் ஊருக்குப் போய்விட்டேன்.

     ரயில், கட கட, குப் குப் என்று எனது தியானத்தைக் கலைக்க முயன்றது.

     ரயில் செல்லச் செல்ல, சென்னையின் இரைச்சல், ஓம் என்ற ஹுங்காரம், நாகரிக யக்ஷனின் திருக்கண் நாட்டங்கள் - எல்லாம் மெதுவாக மறைந்தன. ஏன்? வேகமாகவே நான் ரயிலில் செல்லவில்லை.

     வெளியே நிலா... ஆனால்...

     ஆற்றங்கரை மணல்... கரையில் பேராய்ச்சி கோயில்... கண் பொட்டையாக்கும் மாலை மயக்கத்தில் இதன் கோபுரத் தளத்தில், எத்தனை நாவல்கள் எனது மன உலகத்தில் ஒரு வாழ்க்கையைச் சிருஷ்டித்தன!

     அப்பொழுது, எங்கெங்கோ வாரியிறைத்த பிரம்ம தேவனின் சிதறுண்ட நம்பிக்கைகள் போல, வாழ்க்கை எரியிட்ட கனல்கள் போன்ற நட்சத்திரங்கள்!

     மேல் வானத்திலே அந்த மரமடர்ந்த இருட்டுத் திரைக்கு மேல் செவ்விருள்! அந்தித் தேவனின் சோக நாடகம்!

     அந்தச் சாயங்காலம், சீதையின் சோகத்தையும், கதேயின் பாஸ்டையுமே எப்பொழுதும் என் நினைவிற்குக் கொண்டு வருகிறது.

     பேராய்ச்சி, கோயில் உச்சித் தளத்தில் கையில் புஸ்தகத்துடன் நான்!

     நிசப்தம்...

     பேராய்ச்சி. காளியின் ஸ்வரூபம்... எங்கள் பெரியண்ணத் தேவருக்குக் குடும்பத் தெய்வம் - தலைமுறை தலைமுறையாகக் காத்துவந்த பேராய்ச்சி...

     பேராய்ச்சி! அதில் என்ன தொனி! எவ்வளவு அர்த்த புஷ்டி!

     இருண்ட வெளிச்சத்தில் இருண்ட கோரமான சிலை...

     தாயின் கருணை. என்ன நம்பிக்கை!

     நாளைக்கு அம்மனுக்குக் கொடை.

     நாளைக்கு இவ்வளவு நேரத்தில் இங்கு எப்படியிருக்கும்!

     இந்த மௌன சுகம் மருந்திற்காவது கிடைக்குமா?

     என் கண்கள் இருட்டில் அசட்டையாகத் துழாவுகின்றன.

     கோயில் வாசலில் இரண்டு ஆட்டுக் கிடா.

     பெரியண்ணத் தேவருடையவைதான்... அம்மனுக்கு வளர்த்து விடப்பட்டவை.

     வாழ்வு நாளை வரைதான் என்று அவற்றிற்குத் தெரியுமா? சித்திரபுத்திரன் மாதிரி எனக்குத் தெரியும்.

     எங்கெங்கோ புல்லையும் பூண்டையும் தின்ற கொழுப்பு முட்டி விளையாடுகின்றன... "டபார்!"

     மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது!

     பின்னுக்குச் சென்று மறுபடியும் ஓடிவந்து ... "டபார்!"

     ரத்தங் கண்டாகிவிட்டது! என்ன கொள்கைப் பிணக்கோ?

     நாளைக்கு இரண்டினுடைய இரத்தமும் அந்தப் பலிபீடத்தில் கலக்கு முன், அதற்குள் என்ன அவசரம்?

     அதுதான் சுவாரஸ்யம்!

     அந்தச் சண்டைதான் வாழ்க்கையின் ரகசியம், தத்துவம். அதிலே தான் நம்பிக்கை வைத்து மனித நாகரிகம் இதுவரை வளர்ந்து வந்திருக்கிறது. இனி!... அதைப் பற்றி எனக்குத் தெரியாது. 'நாளைக்குப் பலியாகப் போகிறோம்!' என்று தெரிந்தால் இந்த மாதிரி முட்டிக் கொள்ள மனம் வருமா? வந்தால், முட்டிக் கொள்வதில், வாழ்க்கைப் போட்டியில், சுவாரஸ்யம் ஏற்படுமா?...

     "ஸார்! கொஞ்சம் நகர்ந்து உட்காருங்கள்!"

     நான் ரயிலில்தான் உட்கார்ந்திருந்தேன். அந்த மாலை மயக்கந்தான்... அந்த ஊர் பைத்தியந்தான்!
 

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com