ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 874 பதவிகளுக்கு வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (டிச.27) நடக்க உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 19 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 183 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் 225 ஊராட்சித் தலைவர், 2,097 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 2,524 பதவிக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
27 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலில் ஈரோடு, கோபி, கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், தாளவாடி, டி.என்.பாளையம் என ஊராட்சி ஒன்றியங்களில் 8 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 79 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, 95 ஊராட்சித் தலைவர், 894 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 1,076 பதவிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் நடக்கிறது. ஊராட்சித் தலைவர் பதவியை பொறுத்தமட்டில் ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி, பிச்சாண்டம்பாளையம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் வள்ளிபுரம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை என 4 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியை பொறுத்தவரை கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சி ஆறாவது வார்டில் யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அங்கு தேர்தல் நடக்கவில்லை.
தவிர ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 22, மொடக்குறிச்சி 90, கொடுமுடி 34, கோபி 4, நம்பியூர் 20, தாளவாடி19, டி.என்.பாளையம் 8 என மொத்தம் 201 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கணக்கின் அடிப்படையில் 202 பதவிகள் தவிர, 874 பதவிகளுக்கான தேர்தல் மட்டும் நடக்க உள்ளது.
தேர்தல் நடைபெறும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடிக்கு புதன்கிழமை காலை முதல் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, 72 பயன்பாட்டு பொருட்கள், படிவங்கள், வாக்காளர் பட்டியல் போன்றவை, வாகனங்களில் ஏற்றி, போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் அனுப்பும் பணி துவங்கியது.
இந்த வாக்குச்சாவடியில் பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அதிகாரி உள்பட 7 பேரின் விவரங்களும், மண்டல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தேர்தல் பணியை விரைவுபடுத்தி உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.