மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
வாக்காளர்களுக்கு இருக்கும் வாக்குரிமை தொடர்பான 49பி சட்டப்பிரிவு குறித்து சமீபத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரத்தை செய்திருக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், அதில், உங்கள் வாக்கினை வேறு யாரேனும் பதிவு செய்திருந்தால் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
சர்கார் படத்தைத் தொடர்ந்து 49பி சட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெரிந்திருக்கும் நிலையில், அது குறித்து தேர்தல் ஆணையமும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
இந்த விளம்பரத்தை, சர்கார் படம் எடுத்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் வரவேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று ரிலீஸ் ஆன நடிகர் விஜய் நடித்த படம் சர்கார். இந்த படம் முழுக்க முழுக்க 49பி சட்டப்பிரிவு குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் கதையம்சம் அமைந்திருந்தது.
இந்த சட்டப்பிரிவின்படி, ஒருவர் பெயரில் வேறு யாரேனும் வாக்களித்திருந்தால், அந்த வாக்கினை ரத்து செய்துவிட்டு, தனது வாக்குரிமையை நிலைநாட்ட முடியும்.
இந்த படத்துக்குப் பிறகு, கூகுளில் 49பி சட்டப்பிரிவு குறித்து அதிகமானோர் தேடியதும் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கு பல அரசியல் அழுத்தம் காரணமாக சிக்கல்கள் ஏற்பட்டாலும், சில காட்சிகளை நீக்கிய பிறகு அது திரையரங்குகளை அடைந்து படம் வெற்றியும் பெற்றது. 2018ம் ஆண்டின் சிறந்த படம் என்ற பிரிவில் இடம்பெற்றிருந்த சர்கார் வர்த்தக ரீதியாக 200 கோடி அளவுக்கு வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.