நோட்டாவை விரும்பாத குமரி வாக்காளர்கள்

தமிழகத்தில் கடந்த 2014 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு அதிகம் வாக்களிக்க விரும்பாதவர்கள் என்ற பெருமை கன்னியாகுமரி
Published on


தமிழகத்தில் கடந்த 2014 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு அதிகம் வாக்களிக்க விரும்பாதவர்கள் என்ற பெருமை கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்களுக்குக் கிடைத்தது. இத்தொகுதியில் நோட்டாவுக்கு 4,150 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதே நேரம், நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 46,559 பேர் வாக்களித்திருந்தனர்.
நோட்டா அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமை இந்த நோட்டா பொத்தான். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் இந்தப் பொத்தானை அழுத்துவதன் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரைத் தேர்வு செய்ய விரும்பவில்லை என்று அர்த்தம் கொள்ளப்படும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கீழே கடைசியாக இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த பொத்தான் அமைந்திருக்கும்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில், இந்தியாவிலேயே முதன்முறையாக நோட்டாவுக்கு வாக்களிக்கும் முறை பயன்படுத்தப்பட்டது. இந்த வசதி தமிழகத்தில் முதன்முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
2014 இல் இந்தியாவின் 16-ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.1 % (59,97,054) நோட்டா வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் 39 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) நோட்டா வாக்குகள் பதிவாகியது. அதிகபட்சமாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் 46,559 நோட்டா வாக்குகள் பதிவாகின. இது இந்திய அளவிலும் முதன்மை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 4,150 வாக்குகள் பதிவானது. இதன் மூலம், தமிழகத்தில் நோட்டாவை அதிகம் விரும்பாதவர்கள் கன்னியாகுமரி வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com