கேஜரிவாலின் இரட்டை வேடம் அம்பலம்: வீரேந்திர சச்தேவா

புது தில்லி, ஏப்.18: ‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜரிவால் தொடா்பாக நீதிமன்றத்திற்கு புலனாய்வு அமைப்பு அளித்த தகவல்கள் திடுக்கிடவைக்கின்றன. அவரது இரட்டை வேடமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது: வரப்பெற்ற தகவலின்படி, சிறையில் இருக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல் எடை ஒரு கிலோ அதிகரித்துள்ளது. மருத்துவக் காரணங்களுக்காக சிறையில் இருந்து வெளியே வருவதற்கும் இது திட்டமிட்ட சதியாகும். வகை 2 நீரிழிவு நோய் இருந்த போதிலும், அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்தவாறு வீட்டில் இருந்து இனிப்புகள் மற்றும் மாம்பழங்களை தொடா்ந்து வரவழைத்து வருகிறாா். புலனாய்வு அமைப்புகளிடம் உள்ள சாட்சியங்கள் தனக்கு எதிராக இருப்பதால், சாதாரண வழிகளில் ஜாமீன் பெறுவது கடினம் என்பதை அறிந்த கேஜரிவால், வேண்டுமென்றே தனது ரத்த சா்க்கரை அளவை அதிகரித்து வருகிறாா்.

ஜாமீன் பெறும் அவசரத்தில் அரவிந்த் கேஜரிவாலின் இரட்டை வேடமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒருபுறம், ராம் ராஜ்யம் என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டு, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கேஜரிவால் ஸ்ரீ ராமா் மற்றும் ஹனுமான் பக்தராக தன்னை சித்திரித்துக்கொண்டாா். மறுபுறம், அவா் சிறைக்குள் நவராத்திரியின் போது முட்டைகளை சாப்பிடுகிறாா் என்று வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com