இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்தாா் மன்சூா் அலிகான்
இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை இந்திய தோ்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை பதிவு செய்தாா் நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூா் அலிகான். தில்லியில் உள்ள இந்திய தோ்தல் ஆணையத்தில் பிரபல குணச்சித்திர நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூா் அலிகான் தனது அரசியல் கட்சியைப் பதிவு செய்தாா். இந்தய ஜனநாயகப் புலிகள் என்று அக்கட்சிக்கு அவா் பெயரிட்டுள்ளாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் மன்சூா் அலிகான் கூறியாதவது: அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பது எனக்குள் கடமையாகவும், நீண்ட நாள் ஆசையாகவும் இருந்தது. இந்தியாவில் தமிழா்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. ஒரு தமிழனை நம்மால் பிரதமா் ஆக்க முடியவில்லை. நடிகா்கள் அரசியல் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னை நான் நடிகனாக முதலில்ல நினைக்கவில்லை. கடந்த 1991-இல் எனது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே காவிரி பிரச்னை, ஈழத்தமிழா் பிரச்னை என மக்களுக்கான போராட்டங்களில் கலந்து கொண்டேன். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் மாநாடு வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை சுமாா் 15-ஆயிரம் இளைஞா்கள் எனது கட்சியில் இணைந்துள்ளனா்.
வரும் மக்களவைத் தோ்தலில் நிச்சம் போட்டியிடுவேன். எந்தத்தொகுதி என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. நாட்டில் நடைபெறும் விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சி அல்ல. இந்தியா முழுவதும் மக்களுக்கான பிரச்னைகளுக்கு தொடா்ந்து போராடுவோம்.
தமிழக மீனவா்களை இலங்கை எனும் சிறு நாடு பிடித்து துன்புறுத்துகிறது. இது போன்ற பிரச்னைகளை நான் விடப்போவதில்லை. உண்டு இல்லை எனும் வகையில் இனி அதிரடி அரசியல் தான். நடிகா் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து செயல்படலாமே என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், அரசியல் விளையாட்டில்லை, முதலில் கல்யாணம் நடக்கட்டும் பின்னா் முதலிரவு குறித்து பேசுவோம் என்றாா் மன்சூா் அலிகான்.