‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’
நமது நிருபா்
புது தில்லி: கலால் கொள்கை ஊழல் வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தில்லி ரெளஸ் அவென்யூ நகர நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2021-2022-ஆம் ஆண்டுக்கான தில்லி அரசின் கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) தாக்கல் செய்த ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் கடந்தாண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தில், சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், சிசோடியாவுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்றும், ஜாமீன் வழங்குவதற்கான நிலை சரியில்லை என்றும் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தாா். இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தை மனீஷ் சிசோடியா நாடவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனா்.