

பசும்பொன் பெட்டகம் - தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம்; பக்.508; ரூ.400; காவ்யா, சென்னை-24; )044- 2372 6882.
முப்பது கிராமங்களில் மூவாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு அதிபதியாக இருந்தவர். அவை அனைத்தையும் ஏழை எளியவர்களுக்குத் தானமாக்கிவிட்டு, எளிய வாழ்வை விரும்பி ஏற்று, திண்ணையில் துண்டை விரித்து, கையைத் தலைக்கு வைத்துத் தூங்கிய மக்கள் தலைவர். அவர்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
அவருடைய நூற்றாண்டையொட்டி அவரைப் பற்றி பல்துறை அறிஞர்கள் நூறு பேருடைய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
தனது 25 வயதில் (1933) முகவை மாவட்டத்திலுள்ள சாயல்குடி என்ற ஊரில் ஒரு வாசகசாலை ஆண்டு விழாவில் முதன்முறையாக மேடையேறிப் பேசிய அவரது கன்னிப் பேச்சிலேயே 2 மணி நேரம் 40 நிமிடங்கள் சிறப்பாகப் பேசி மக்கள் கூட்டத்தை வியப்பில் ஆழ்த்தியவர். தொடர்ந்து ஆன்மிகம், அரசியல் எனப் பல்வேறு மேடைகளில் சங்க நாதமாக முழங்கியவர். தனது 30 ஆண்டுகால தீவிரப் பொதுவாழ்வில் 11 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். தெய்வத் தொண்டுக்கும் தேசத் தொண்டுக்கும் துறவுக் கோலமே ஏற்றது என அதை விரும்பி ஏற்றவர். நெருப்புக்கு நிகரான கடும் பிரம்மச்சரியத்தை இறுதிவரை கடைப்பிடித்தவர்.
தான் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் உரிமையானவன் அல்ல என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆன்மிகமும் அரசியலும் வெவ்வேறானவை அல்ல என்பது அவர் கருத்து. அன்றைக்கே இலங்கைத் தமிழர் பற்றி கவலைப்பட்டு அவர் பேசியிருப்பது நமக்கு வியப்பைத் தருகிறது. "திபேத்திலே இருந்து வருகிற அகதிகளிடத்தில் காட்டுகிற அக்கறையை இலங்கைத் தமிழர்களிடத்திலே மத்திய அரசு காட்டவில்லையே, ஏன்?' என்று வினவுகிறார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பன்முக ஆற்றல் குறித்து தற்கால இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள நிச்சயம் உதவும் ஒரு கருவூலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.