

எல்லோருக்கும் எப்போதும் உணவு- எம்.எஸ். சுவாமிநாதன்; தமிழில்: சக்தி த. சோமசுந்தரம் ; பக்.336; ரூ.150; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; )044-28132863.
புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் ஆற்றிய உரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
உலகமயச் சூழலில் வளரும் ஏழை நாடுகள் எதிர்கொள்கிற முக்கியப் பிரச்னைகளில் ஒன்றுதான் உணவு. உலக முழுதும் உணவுப் பொருள்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றி தனது லாப நோக்கத்துக்குப் பணப் பயிர் என்ற பெயரில் மண்ணையும், பாரம்பரிய விதைகளையும் சீரழித்து வரும் சூழல் உள்ளது. இந்நிலையில் இது போன்ற புத்தகம் தமிழில் மொழிப் பெயர்ப்பாக வந்திருப்பது சிறப்பு.
உணவுப் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. நீடித்து இருக்கத்தக்க உணவு மற்றும் நீர் பாதுகாப்பு என்ற தலைப்பில் உணவுப் பிரச்னையில், 21 ஆம் நூற்றாண்டு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்குமா என்ற முக்கிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், நிலைத்த வேளாண்மையின், சுற்றுச்சூழல் ஆதாரங்களைப் பாதுகாப்பதும், கடல் மட்டம் மற்றும் பருவ நிலை மாற்றங்களைத் தாக்குப் பிடிப்பதுமான துறைகளில், உலகளவிலான போக்கு உற்சாகப்படுகிற அளவில் இல்லை என்று எச்சரிக்கிறார். அதேசமயம் எல்லோருக்கும் உணவு மற்றும் குடிநீர் என்னும் இலக்கை அடைய வாய்ப்புகள் இன்னும் இல்லாமல் இல்லை; அறிவியல் தொழில்நுட்பம், இதற்கான அசாதாரணமான வாய்ப்புகளுக்கு வழி செய்து இருக்கிறது என்றும் நம்பிக்கையூட்டுகிறார்.
ஆசிய வளர்ச்சி வங்கி கூறுகிறபடி, உலகில் கிட்டத்தட்ட 900 மில்லியன் ஏழை மக்கள் ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் வாழ்கிறார்கள். இந்தப் பகுதிகளில் வறுமையை ஒழிக்க ஒரே வழி வேளாண்மை சார்ந்த அல்லது வேளாண்மை சாராத பண மதிப்புள்ள வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவதே ஆகும் என்பன போன்ற தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் உரையை கேட்கத் தவறியவர்களுக்கும், எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து அறிய விரும்புபவர்களுக்கும் பயனுள்ள புத்தகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.