ஆறுமுகசாமியின் ஆடுகள் - சா. கந்தசாமி; பக். 304; ரூ. 220; நற்றிணைப் பதிப்பகம், சென்னை - 5; 044 - 2498 7700.
சா. கந்தசாமியின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றான "தக்கையின் மீது நான்கு கண்கள்' உள்பட 16 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.
இதில் வருகிற "ஆறுமுகசாமியின் ஆடுகள்" கதை நெஞ்சைத் தொட்டு நெகிழ்த்தக்கூடியது. "இரணிய வதம்' - தன் மனைவியைப் பெண்டாளுகிற இரணியன் வேடம் போடுகிற கூத்துக்காரனை, கூத்தின்போதே புலிநகம் கொண்டு கொல்லும் நரசிம்ம வேடம் தரித்த கூத்துக்காரனின் கோபத்தை மிகையின்றி சித்திரிப்பது, மிக அபூர்வமானது. வெளியான காலத்திலேயே பிரபலமான "தக்கையின் மீது நான்கு கண்கள்' - ஓர் அசாதாரணான கதை. மீன்பிடிப்பையொட்டி தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே சத்தமில்லாமல் வந்துபோகிற "ஈகோ' தனித்துவமானது.
பழைய தஞ்சை மாவட்டத்தின் வாய்க்கால்களும் புன்னை மரங்களும் ஆடுகளும் மீன்களும் குயில்களும் -
இவற்றோடு மனிதர்களும் கலந்த இயல்பான உலகம்தான் கந்தசாமியின் படைப்புலகு.
அவரது படைப்புகளில் படைப்பாளியின் குரல் பாத்திரங்களை மீறிக் கேட்காது. அவரது கதாபாத்திரங்கள் அசலாக இருக்கின்றன. "தக்கையின் மீது நான்கு கண்கள்' கதையை எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படிக்கும்போதும் நாம் சலனப்படுவதற்குக் காரணமும் இந்த அசல் தன்மைதான்.
ஆனால், தொகுப்பின் உருவாக்கத்தில் சில குறைகள் உள்ளன. பல இடங்களில் எழுத்துப்பிழைகள் மலிந்துள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள எந்தக் கதையின் கீழும் அது வெளியிடப்பட்ட ஆண்டோ வெளியிட்ட இதழின் பெயரோ அடிக்குறிப்பாக இடம்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.