மணிக்கொடி - ஜோதிர்லதா கிரிஜா; பக்.752; ரூ.500; சேது அலமி பிரசுரம், ஜி-7, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராயநகர், சென்னை-17.
கல்கியின் பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். "நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள்; நாடு தழுவிய மாபெரும் பிரச்னைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டவும் இந்த புதினம் எழுதப்பட்டது' என்கிறார் நூலாசிரியர். கங்கா, பவித்ரா பாத்திரங்கள் நாவலைப் படித்து முடித்த பின்னும் நீண்டகாலம் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும். வாஞ்சி அய்யர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தார், ராஜ்காட் என்பது பன்னெடுங்காலமாக யமுனை ஆற்றின் கரையில் இருந்துவரும் வரலாற்று புகழ்வாய்ந்த அரச பரம்பையினரின் இடுகாடு. காந்தியடிகளுக்கு இங்கேதான் எரியூட்டப்பட்டு அது மேலும் புகழ்பெற்றது என்பன போன்ற வரலாற்றுத் தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. வரலாற்று நிகழ்வுகளை உரையாடல்கள் மூலமும் அது சாத்தியப்படாத இடங்களில் பாடப்புத்தகப் பாணியிலும் நூலாசிரியர் விவரித்துள்ளார். இது சற்று அலுப்பைத் தந்தாலும், வரலாற்றுப் பின்புலம் கொண்ட நீண்ட நாவலில் இதைத் தவிர்க்க முடியாதுதான். விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் வலியை உணர்வதற்கும், அவர்களின் சீரிய நெறிமாறா வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளவும் இந்தப் புதினம் இன்றைய தலைமுறைக்கு ஓர் ஆவணமாய்த் திகழும் என்பது மிகையல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.