வடலூரார் வாய்மொழி- சாமி. சிதம்பரனார்; பக்.144; ரூ. 90; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 1510.
இராமலிங்க அடிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உதவும் நூல். அவரின் திருஅருட்பாவின் சிறப்பியல்புகளையும், அவற்றில் அடங்கியுள்ள தத்துவ நெறிகளையும் விளக்கமாக எடுத்துக் கூறுகிறது. திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை நன்கு படித்துணர்ந்து, அவற்றில் உள்ள சிறந்த கருத்துகளை இராமலிங்க அடிகள் தனது பாடல்களில் நயம்பட எடுத்தாண்டுள்ளதை மேற்கோள்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
வள்ளலாரின் சன்மார்க்கக் கொள்கையை - சன்மார்க்க சங்கத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் நூலாகவும் இது அமைந்துள்ளது.
வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் அவருக்குக் கோயில் கட்டி தெய்வமாக வழிபடுகின்றனர். ஆனால், இறைவனைப் பற்றிய உண்மையை அறியாதவர்களே மற்றவர்களைத் தெய்வமாக வழிபடுகின்றனர் எனக் குறிப்பிட்டு, தன்னை வழிபடுவதை வெறுத்து ஒதுக்கிய மகான் வள்ளலார் என்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வள்ளலார் திருமணம் செய்து கொண்டாலும், இல்லற வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொண்டு, மக்கள் அனைவரும் ஜாதி, மத பேதமின்றி ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். முருகப்பெருமான் உள்ளிட்ட கடவுளர்களைப் பற்றி வள்ளலார் பாடல்களைப் பாடிய போதிலும், இறைவன் உருவமற்ற, ஜோதியின் வடிவமானாவன் என்பதை வலியுறுத்தினார் என்பதையும் நூலாசிரியர் விளக்கிக் கூறியுள்ளார்.
இந்த நூலின் ஒரே குறை - ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.