

சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தெளலா-செ.திவான்; பக்.360; ரூ.400; ரெகான்-ரய்யா பதிப்பகம், பாளையங்கோட்டை-627 002, ✆ 90803 30200.
முகலாய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிரிட்டிஷாரை எதிர்த்தவர்களில் முக்கியமானவர் அலிவர்தி கான். இவர், 1740-இல் சர்பராஸ் கானை எதிர்த்து புரட்சி நடத்தி வங்கத்தின் நவாப்பாக அரியணை ஏறினார். அப்போது, அங்கிருந்த ஐரோப்பிய கம்பெனிகளிடம் அலிவர்தி கான் கண்டிப்புடன் நடந்து கொண்டார். அவர்கள் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். 1756-இல் அவர் மறைவையடுத்து, அவரது இளைய மகளின் மகனான சிராஜ் உத் தெளலா வங்கத்தின் நவாப்பாக பொறுப்புக்கு வந்தார்.
ஜி.ஏ.ஹெண்டி என்பவர், 'அந்நாளில் பிரிட்டிஷாருக்கு முக்கிய வர்த்தக தலமாக கல்கத்தா இருந்தது. அவர்கள் தங்களுடைய கோட்டை கொத்தளங்களை உறுதிப்படுத்த தொடங்கியதும், சிராஜ் உத் தெளலா பிரிட்டிஷாரை எதிர்த்து போர் தொடங்கினார். இந்தச் செயல் அவருடைய நாட்டுப் பற்றுக்கு ஒரு சான்று' என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்தான் வங்கத்தின் கடைசி சுதந்திர நாவாப் ஆவார். அதன்பின்னர், இந்திய துணைக் கண்டம் முழுவதும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையின்கீழ் வந்தது என்று கூறலாம்.
1756-இல் தனது 23-ஆம் வயதில் வங்கத்தின் நவாப் ஆன அவர், படைத் தளபதியின் துரோகத்தால் 1757 பிளாசி போரில் ராபர்ட் கிளைவால் வீழ்த்தப்பட்டார். பிரிட்டிஷாரை எதிர் கொண்டு வெற்றி பெற்று, பின்னர் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு அவருடையது.
இந்தச் சரித்திர ஆய்வு நூல் வங்காளம் எந்தெந்த அரசர்களால் ஆளப்பட்டது, வங்காள முஸ்லிம் ஆளுநர்கள், வங்காள அரசர்கள் தொடங்கி சுதந்திர முழக்கம் வரை 20 தலைப்புகளில் வரலாற்றை விவரிக்கிறது.
ஆறாவது தலைப்பில்தான் நவாப் அலிவர்தி கான் வரலாறு விவரிக்கப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர்கள் அவர் குறித்து எழுதியுள்ளவை, சிராஜ் உத் தெளலாவின் வளர்ச்சி, வில்லியம் கோட்டை வெற்றி, அவருடைய படுகொலை என்று ஒவ்வொரு நிகழ்வும் வரலாற்று நாவலைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.