காவிரி தீர்ப்புகளும், பஞ்சாயத்துகளும் - வெ.ஜீவகுமார்; பக்.112; ரூ.110; இந்தியன் யுனிவர்சிட்டீஸ் பிரஸ், சென்னை-600 018. ✆ 044-2433 2924.
தமிழகத்தின் பெருமிதங்களில் ஒன்றாக ஏடறிந்த காலத்துக்கு முன்பு இருந்தே காவிரி விளங்குகிறது. காவிரிக்கு தமிழகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியச் சாட்சியங்கள் கிடைக்கின்றன. ஆனால், கி.பி. 9-ஆம் நூற்றாண்டில்தான் கன்னடத்தில் காவிரி குறித்த முதல் நூல் கிடைக்கிறது.
தமிழகத்தில் காவிரியில் கல்லணை கட்டப்பட்டது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகும். ஆனால், கடந்த 300 ஆண்டுகளாகத்தான் கர்நாடகம் காவிரி நீரை தமிழகத்துக்கு மறுக்கிறது.
இரண்டாம் இராசராசன், ராணி மங்கம்மாள், மன்னர் சரபோஜி ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும், பிரிட்டிஷார் ஆட்சியிலும் காவிரி நீரைத் தடுக்கும் முயற்சிகள் நடைபெற்றதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, தமிழகத்துக்கான காவிரி நீர்ப் பங்கீட்டை மையப்படுத்திய அத்தனை அரசியல், சட்டப் போராட்ட நிகழ்வுகளையும் இந்த நூல் பருந்துப் பார்வையில் அலசுகிறது. அரசியல் மனமாச்சர்யங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கர்நாடக அரசியல் தலைவர்கள் காவிரிப் பிரச்னையில் ஓரணியில் திரள்வதையும், தமிழகத்தில் அரசியல் ஒற்றுமை இல்லாததையும் இந்த நூல் பதிவு செய்துள்ளது.
பிரதமர்களாக பதவி வகித்த வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால் ஆகியோரைத் தவிர ஏனையோர் காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் அரசியல் ஆதாயத்துடன் செயல்பட்டதாக, செயல்படுவதாகவும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
இன்றைய கர்நாடக அரசியல் என்பது சக மாநிலத்துக்கு தண்ணீர் உரிமையை மறுப்பதாக அமைகிறது என்பதை இந்த நூல் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.