வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும் - முனைவர் என்.பத்ரி; பக்.168; ரூ.190; புஸ்தகா டிஜிட்டல்மீடியா (பி.) லிட்., பெங்களூரு- 560 076, ✆ 74185 55884.
இரு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ள நூலாசிரியர் தினமணியில் எழுதிய கட்டுரைகளில் 38 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். முதியோர் நலம் தொடர்பான விழிப்புணர்வில் ஈடுபட்டுவரும் அவர், சோர்ந்து கிடப்போரை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டும் வகையில் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகள் பல இதில் இடம்பெற்றுள்ளன.
'நம் தேவையை நாம் அறிவோம்', 'மறத்தலும் மன்னித்தலும்', 'தோல்வியே கற்றுக்கொடுக்கும்', 'தொடரட்டும் மனிதநேயம்' ... என ஒவ்வோர் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தாலே மனதில் உற்சாக எண்ணம் மேலோங்கும்.
சோம்பலையும் தயக்கத்தையும் விட்டொழித்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், கல்வியின் அவசியம், வறுமை ஒழிப்பு, சேமிப்பின் அவசியம், மனித நேயம், பெண்கள் பாதுகாப்பு, உறவு-நட்பின் அவசியம், கடனில்லா வாழ்வு ... என்று அன்றாட மனிதன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகளும், சவால்களைச் சந்தித்து வாழ வேண்டியதன் அவசியத்தையும் இந்த நூலில் இடம்பெறுள்ள கட்டுரைகள் உணரவைக்கும்.
'மனிதநேய மாண்பு மறைந்துவிட்டால் நாகரிகமே நசிந்து போகும்' , 'உழைத்துக் களைத்தவனுக்கு ஓய்வு தேவைதான்.
ஆனால், சோம்பிக் கிடக்கின்ற இளைஞனுக்கு வெற்றிப் படிகள் என்றுமே வெற்றுப்படிகள்தான்' ... என்றெல்லாம் கூறும் நூலாசிரியரின் வார்த்தைகள் இன்றைய எண்ம உலகில் மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டுதல்.
இதுபோன்று நூற்றுக்கணக்கான வழிகாட்டுதல்கள் நூல் முழுவதும் விரவியுள்ளன. வீட்டிலேயே பெண்கள் அடைந்து கிடக்காமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பெண்களுக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.