உயர்தனிச் செம்மொழி-கவிஞர் கவிதாசன்; பக்.264; விலை ரூ.260; குமரன் பதிப்பகம், சென்னை -600 017. ✆ 94440 13999.
தமிழ் இலக்கியங்கள் கூறிய கருத்துகள் முன்னேற்றத்துக்கானவை என்று இந்த நூலில் இடம்பெற்றுள்ள 30 கட்டுரைகளும் கூறுகின்றன. இந்த நூலில் பல்வேறு துறை வல்லுநர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட கருதுபொருளுக்கு ஏற்ப தகவல்களை அளித்துள்ளனர்.
பொதுவாக, செம்மொழி என்றாலே வழக்கொழிந்த மொழி என்ற பார்வையைப் பொய்யாக்கி, சீரிளமைத் திறத்தோடு நாளும் வளர்ந்து வரும் மூத்த மொழியாம் தமிழ்மொழி என்னும் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கின்றன கட்டுரைகள்.
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், தனித்த பார்வையில், ஓர் ஆய்வுக் கோவையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தக் கட்டுரைத் தொகுப்பு. இதில் தகவல் தொடர்பு மொழி தொடங்கி 30 கட்டுரைகளில் தகவல் தொடர்பு, வணிக மேலாண்மை, மருத்துவம், தொழில்நுட்பம், கடமை உணர்வு, வேளாண்மை, உறவு, முன்னேற்றம், கொடை, வீரம், அன்பு, பண்பு, அறம், கலைகள், அறிவியல், ஆன்மிகம், இலக்கணம், புதுமை, மனிதம், நீதி, காதல், மனித நேயம், ஆவணங்கள், செவ்வியல், கவிதை, இயற்கை, கல்வி, நம்பிக்கை என்னும் பகுப்புகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
உலகின் மிகப் பழைமையான, பரவலாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக, அதன் வளமான இலக்கிய மரபு, நீண்ட வரலாறு, பிற மொழிகள், பண்பாடுகளுக்கு ஏற்படுத்திய ஆழமான தாக்கம் காரணமாக, தமிழ் 'மொழிகளின் மொழி' என்று அழைக்கப்படுகிறது. தமிழரின் தொன்மையும், வரலாற்றுத் தொடக்கமும் மிகப் பழைமையானது என்று அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த நூல் அதற்கு வலுசேர்க்கும் ஆதாரமாகத் திகழ்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.