தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் வரலாறு; பாகம்-1- 1920 முதல் 1980 வரை-வடகரை செல்வராஜ்; பக். 640; ரூ.900; ரேவதி பப்ளிகேஷன்ஸ்; சென்னை-24; ✆ 87545 16298.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வரலாறு 1920-இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலிலிருந்து தொடங்குகிறது. அப்போதைய இரட்டை ஆட்சி முறையில் சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கியத் துறைகள் பிரிட்டிஷ் ஆளுநரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின.
அதன்பிறகு இந்தியாவின் தேர்தல் வரலாறு பல்வேறு பரிமாணங்களைப் பெற்றது. அதில், 1920 முதல் 1980 வரையிலான தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றை ஏராளமான தரவுகளுடன் விரிவாகத் தருகிறது இந்த நூல். ஒவ்வொரு தேர்தலின் முடிவுகளும் அட்டவணையாக அளிக்கப்பட்டுள்ளன.
மொழிவாரி மாநிலக் கோரிக்கை வலுப்பெற்று நடைபெற்ற போராட்டங்கள், சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பான மசோதா மீதான விவாதத்தில், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றுவதற்கு என்ன அவசியம் வந்தது எனக் கேள்வி எழுப்பிய உறுப்பினரை அடுக்கடுக்கான பதில் கேள்விகளால் அண்ணா திணறடித்தது போன்ற தகவல்கள் இன்றைய தலைமுறை அவசியம் அறிய வேண்டியவை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலே ஒரு திருவிழாதான். 1951-52-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல் குறித்த தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளது. அரசியல் தெளிவை ஏற்படுத்தும் இந்த நூல் ஆவணம் போன்று பாதுகாக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.