ஈழ அண்ணல் மாவை. சோ.சேனாதிராசா (வாழ்க்கை வரலாறு) - பேரா. பாஞ்.இராமலிங்கம்; பக்.400; ரூ.600; தமிழ்ப் புதுவை பதிப்பகம், புதுச்சேரி- 605 008.
1942 -இல் மாவிட்ட புரத்தில் பிறந்த மாவை. சோ. சேனாதிராசா தமிழரசு கட்சியில் தந்தை செல்வா, அ. அமிர்தலிங்கம் தலைமையில் சேர்ந்தார். ஆட்சி மொழி - தனி சிங்கள சட்டம் கொண்டு வந்தபோது சேனாதிராசாவும் வீதியில் இறங்கிப் போராடினார். இவ்வாறு, 1972 முதல் 1983 வரை 11 முறை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார்.
1976 - இல் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் "தமிழ் ஈழம்' என்ற தனிநாடு கோரிக்கை முன்மொழியப்பட்டது. அன்று தொடங்கி "தமிழ் ஈழம்' உலகத் தமிழர்களின் லட்சியமாயிற்று. எண்ணிலடங்கா அரச அடக்குமுறைகள் - எதிர் போராட்டங்கள். 1985 -ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையில், இந்திய ஆதரவை இழக்க மனமில்லாமல் ஒரு மாற்றுத் திட்டத்தை ராஜீவ் காந்தியிடம் அளித்தார். பின்னர், 1987-இல் ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் வாழ்வு தரும் என்று போராடினார்.
தமிழர்களின் வாழ்வாதாரம், பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாத்தல், அரசியல் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டல் என்று போராட்டமே இவரது வாழ்க்கையானது. செல்வா, அ.அமிர்தலிங்கம் என்று அந்தக் கட்சியின் அடுத்தகட்டத் தலைவராக வரலாற்றுப் பக்கங்களில் சேனாதிராசா விளங்குகிறார்.
2009- ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பிறகு, பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து தமிழர்களுக்கான நியாயமான, அர்த்தமுள்ள அரசியல் தீர்வை எட்ட முயற்சித்தார். இதில் அவர் பின்னடைவைச் சந்தித்தாலும், அனைத்து சமாதான முயற்சியிலும் கடுமையாக உழைத்தார்.
இவரது சாதனைகளில் ஒன்று, தமிழர்களின் அன்பால் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். எப்போதும் மக்களால் அணுகக்கூடியவராகவும் இருந்தார். சேனாதிராசா தன் வாழ்க்கையைக் கட்சிக்காக அர்ப்பணித்துள்ளது நூலில் காணும் சம்பவங்கள் மூலம் தெரிய வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.