சர்வக்ஞர் வெண்பா

தமிழ்-கன்னட மொழி இலக்கியங்களுக்கிடையே பாலம் அமைக்கும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், சர்வக்ஞரின் கருத்துகள் குறித்து இரு மொழிகளிலும் ஒப்பாய்வு செய்வோருக்கு மிகவும் பயனுள்ளது.
சர்வக்ஞர் வெண்பா
Updated on
1 min read

சர்வக்ஞர் வெண்பா-ஓர் பன்முகப் பார்வை; பேராசிரியர் க.கோவிந்தராசன்; பக்.312; ரூ.350; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 021, ✆ 93805 30884.

கர்நாடகத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவர் சர்வக்ஞர். ஜாதிமத வேறுபாடுகளை தனது பாடல்களால் தகர்த்தெறிந்து, சிறந்த சீர்திருத்தவாதியாகவும், முற்போக்காளராகவும், மூடநம்பிக்கைகளைச் சாடியவராக புரட்சியாளராகவும் விளங்கிய துறவி. 2,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் படைத்துள்ள இவர், 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. 'ஆடு தொடாத இலையில்லை, சர்வக்ஞர் சொல்லாத செய்தியில்லை' என்ற பழமொழி, அவரது கவிவண்ணத்தைச் சொல்லும்!

தமிழில் திருவள்ளுவர் ஈரடிக் குறளை இயற்றியதைப்போல, சர்வக்ஞர் கன்னட மொழியில் மூன்று அடிகளாலான யாப்பு வகையில் படைத்துள்ள பாடல்கள் தனிமனித ஒழுக்கம், பக்தி, சமுதாயத்துக்கான அறிவுரைகளை வழங்குகின்றன. அந்தப் பாடல்களை பேராசிரியர் தா.கிருட்டிணமூர்த்தி தமிழில் "சர்வக்ஞர் வெண்பா'வாக மொழிபெயர்த்துள்ளார். அந்த நூலை ஆய்வுப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல், சர்வக்ஞரின் அறிவுப் பார்வை, ஆன்மிகம், இல்லறம், அரசியல், உலகியல் பார்வைகள் குறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்கிறது.

திருக்குறளுடன் மட்டுமன்றி திருவாசகம், தேவாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, நீதிநூல்களில் உள்ள பாடல்களுடனும், ஒளவையார், வள்ளலார், பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டியும் சர்வக்ஞரின் சிந்தனைகளை ஒப்பிட்டு எடுத்துரைப்பது சிறப்பு சேர்க்கிறது.

தமிழ்-கன்னட மொழி இலக்கியங்களுக்கிடையே பாலம் அமைக்கும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், சர்வக்ஞரின் கருத்துகள் குறித்து இரு மொழிகளிலும் ஒப்பாய்வு செய்வோருக்கு மிகவும் பயனுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com