பிறவி மருந்தீசர் ஆலயம்

 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரின் மையப் பகுதியில் தேரோடும் நான்கு வீதிகளுடன், உயர்ந்த மதில் சுவர்களுடன் அமைந்துள்ளது பிறவி மருந்தீசர் கோயில்.  மேற்கு நோக்கிய திருவாயிலை உடைய இந்தக் கோயில

 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரின் மையப் பகுதியில் தேரோடும் நான்கு வீதிகளுடன், உயர்ந்த மதில் சுவர்களுடன் அமைந்துள்ளது பிறவி மருந்தீசர் கோயில்.

 மேற்கு நோக்கிய திருவாயிலை உடைய இந்தக் கோயிலின் உள்ளே இரண்டு திருச்சுற்றுகள் அமைந்துள்ளன. திருக்கோயில் வடபக்கமாக கிழக்கு நோக்கிய திருவாயிலுடன் பெரியநாயகி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.

 தன்னை தரிசனம் செய்பவர்களின் பிணிகளையும், துன்பத்தையும் போக்குவதால் வடமொழியில் பவஒüஷதீஸ்வரர் என்றும், தமிழில் பிறவி மருந்தீஸ்வரர் என்றும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.

 வில்வாரண்யம் என அழைக்கப்படும் இந்த ஷேத்திரம் பிரம்ம தேவர்களாலும், நாரதாதி முனிசிரேஷ்டர்களாலும் பூஜிக்கப்பட்டு, சிவலிங்க பிரதிஷ்டை செய்ததில் 9 தீர்த்தங்கள் பிரசித்தி பெற்றதால் நவதீர்த்தபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரம்மதேவர் இந்த ஸ்தலப் பகுதிக்கு வந்து பிரம்மதீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி, பூஜை செய்த போது வில்வ மரத்தடியில் சிவபெருமான் ஜோதிலிங்கமாக காட்சி அளித்தாராம். அப்போது, தனக்கு காட்சி அளித்தது போல உம்மை வணங்குபவர்களுக்கும் மேற்கு நோக்கி இருந்து சர்வ நலங்களையும் தந்தருள வேண்டும் என்று சிவபெருமானிடம் பிரம்மதேவர் வேண்டினார்.

 இந்தத் தலத்துக்கு பிரம்மபுரி என பெயரிட்டு, இங்குள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்பவர்களுக்கு நோய்கள் தீர்ந்து, எல்லா நன்மைகளும் உண்டாகும் எனக் கூறி, ஜோதிமயமான லிங்கத்தில் சிவபெருமான் மறைந்ததாக வரலாறு கூறுகின்றது.

 சிவபெருமானின் கட்டளைப்படி, இந்தக் கோயிலை அமைத்த பிரம்மதேவர், தேவி சன்னதிக்கு எதிரில் அமிர்தபுஷ்கரணி என்ற தீர்த்தத்தையும் அமைத்தார். இந்தத் தீர்த்தத்தைக் கொண்டு சுவாமிக்கு ஐந்துகால பூஜைகள் செய்யப்படுகின்றன.

 தனிச் சிறப்பு:எல்லா சிவன் கோயில்களும் கிழக்கு முகமாக அமைந்திருக்க, இந்தக் கோயில் மட்டும் தனிச் சிறப்பாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மேலும், இந்தக் கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரர் சன்னதியில் சிவபெருமான் லிங்க வடிவில் அல்லாது, சிலை வடிவில் அமையப் பெற்றுள்ளது தனிச் சிறப்பு.

பஞ்சமுகவாத்தியம்: சிவன் பெருமான் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வாத்தியம், ஐந்துமுகம் கொண்ட தோலினால் ஆன கருவியாகும்.

 இது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயில் ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளது.

 இந்த வாத்தியம் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையிலும், சித்திரைத் திருவிழாவின் வசந்தன் திருவிழா அன்று மட்டுமே பரம்பரை இசைக்கலைஞர்களால் வாசிக்கப்படும். வேறு எந்தக் காலத்திலும் இசைக்கப்படுவதில்லை.

 மரகதலிங்கம்: தீர்த்த விடங்க ஸ்தலங்களுக்கு அடுத்து உப-தீர்த்த விடங்க ஸ்தலமான இங்கு மட்டும் விலை மதிக்க முடியாத மரகதலிங்கம் சிலை இருந்தது.

 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தச் சிலை களவு போனது.

 கஜசம்காரமூரத்தி: இந்தக் கோயிலில் உள்ள இந்தச் சிலையில் யானையை இரண்டாகப் பிளந்து யானையின் தலையை காலில் மிதித்துக் கொண்டும், உடலைப் போர்வையாக போர்த்திக் கொண்டும் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

 இந்தச் சிலையின் நான்கு புறங்களிலும் முனிவர், விநாயகர், தேவியர், முருகன் ஒளிந்து கொண்டிருப்பது போல கலைநுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த ஸ்தலம் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என மூன்றினாலும் சிறப்புற்று விளங்குகிறது.

 பாடல் பெற்ற ஸ்தலம்: திருஞானசம்பந்தர் இந்த ஊரில் ஓடும் முள்ளியாற்றின் கரைவழியாக பல ஸ்தலங்களுக்கும் சென்றதாக தனது பாடலில் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.

 பாடல்கள் பெற்ற பல தலங்கள் இந்த ஊரின் நான்குபுறமும் இருப்பதாலும், பாடல் பெற்ற தலங்களுக்குரிய அனைத்து வகை சிறப்புக்களை உடையதாக இந்தத் தலம் விளங்குவதாலும் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரும் இந்த ஊரையும், இத்தலப் பெருமானையும் பாடியிருப்பார்கள் என்பதில் ஐயமேதும் இல்லை. இந்த ஊர் பதிகங்கள் செல்லரிக்கப்பட்டு சிதைந்திருக்கக் கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

 தினசரி பூஜைகள்: ஆகம விதிகளின்படி, தினசரி ஐந்துகால பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு 25 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அதில் 15-ம் நாளில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவதும், தீர்த்த விடங்க தியாகராஜர் தேர்த் திருவிழாவையும் காணக் கண்கோடி வேண்டும். மேலும், பெரியநாயகி தாயாருக்கு நவராத்திரி உத்சவமும், முருகப் பெருமானுக்கு கந்தசஷ்டி விழாவும், சந்திரசூடாமணித் தாண்டவருக்கு ஆதிரைத் திருவிழாவும், பிற மாதாந்திர விழாக்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன.

 இந்தக் கோயிலுக்கு அருகில் 15 கி.மீ. தொலைவில் திருக்கொள்ளிக்காட்டில் பொங்குசனீஸ்வரர் கோயிலும், 12 கி.மீ. தொலைவில் இடும்பவனம், சற்குணநாத சுவாமி கோயிலும், 20 கி.மீ. தொலைவில் தில்லைவிளாகம் ராமர் கோயிலும், 20 கி.மீ. தொலைவில் எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலும் உள்ளன.

 இந்தக் கோயில் மாவட்டத் தலைமையகமான திருவாரூரிலிருந்தும், மன்னார்குடியிலிருந்தும் தலா 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு நேரடி ரயில்சேவை உள்ளது. கட்டணம் ரூ. 4 மட்டுமே.

 தங்கும் விடுதிகள்: அரசு சுற்றுலா விடுதி, தனியார் விடுதிகளும், ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான நாராயணப்பர் விடுதியும் உள்ளது.

 கோயில் இந்து அறநிலையத் துறையினரின் கட்டுப்பாட்டில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொலைபேசி எண் 04369-222392.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com