

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
குடவறை கோயில்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் சுவாமி தேரில் எழுந்தருளல் வைபவம் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு பிச்சைக்குருக்கள் தலைமையில் தேர் வடம் பிடிக்கப்பட்டது. 2 தேர்கள் உள்ள இத்தலத்தில் உற்சவர் ஒரு தேரிலும், சண்டிகேஸ்வரர் ஒரு தேரிலும் எழுந்தருளினர். சண்டிகேஸ்வரர் தேரினை பெண்கள் மட்டுமே இழுத்தனர். இத்தேர்கள் 6.10 மணியளவில் நிலைக்கு வந்து சேர்ந்தன.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சார்த்தப்படும் சந்தன காப்பு அலங்காரத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை (செப். 17) காலை 10 மணிக்கு கோயில் எதிரே உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரியும், மதியம் 12 மணிக்கு மூலவரான கற்பக விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.