திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா வியாழக்கிழமையன்று காலை கொடியேற்த்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. திருவிழா கொடிப்பட்டமானது பல்லக்கில் வைத்து திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.15 மணிக்கு மகர லக்னத்தில் கொடிமரத்தில் காப்பு கட்டிய த.அசோகன் வல்லவராயர் திருவிழா கொடியினை ஏற்றினார்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம், அலங்காரமாகி காலை 6.15 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடியேற்றும் நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் பா.பாரதி, இணை ஆணையரின் நேர்முக எழுத்தர் கார்த்திகேயன், சிவன் கோயில் மணியம் நவநீதகிருஷ்ணன், திருவிழா பணியாளர் பிச்சையா, சிவன் கோவில் மணியம் மது, வடிவேல், பிச்சையா உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள், சு.வேலாண்டி ஓதுவார் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் பா.பாரதி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ.நாராயணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.