அனைத்து சிவாலயங்களிலும் தேய்பிறை அஷ்டமியான இன்று பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிவாலயங்களின் காவலர் பைரவ மூர்த்தி. நாயை வாகனமாகக் கொண்டவர் இவர். பீரு என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது பைரவர் என்ற திருநாமம். பீரு என்றால் பயம் என்று பொருள். ஆகவே, பைரவர் பயம் தரக்கூடியவர், எதிரிகளை அஞ்ச வைப்பவர்.
இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும்.
அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் வேலை செய்யும் இடத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.
தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசும் நெய் ஆகியவை பஞ்ச தீபமாகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.
ஸ்ரீ பைரவருக்கு இந்தப் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.