நினைத்த காரியம் கைகூடும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 21 - மே 27) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
நினைத்த காரியம் கைகூடும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 21 - மே 27) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சகோதர, சகோதரிகளால் சில நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத வகைகளில் பொருள் வந்து சேரும். பயணங்களைத் தவிர்த்திடுங்கள். மூத்தோர் சொல் கேட்டு நடக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் தொந்தரவுகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் அனுசரணையால் சற்று நிம்மதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் இராது. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளவும். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சந்தையில் நிலவும் போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் இடும் கட்டளைகளை நிறைவேற்றப் பாடுபடுவீர்கள். சுறுசுறுப்புடன் கட்சிப்பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் பயணங்களைத் தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கால் எரிச்சல், மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளது. தகுந்த ஆகாரமும், உடற்பயிற்சியும் தேவைப்படும். மாணவமணிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 21, 22. சந்திராஷ்டமம்: 26, 27.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் பலப்படும். புது வீடு, வாகனம் வாங்குவதற்கு முன்பணம் கொடுக்க முனைவீர்கள். பிறரிடம் அன்பு செலுத்துவதில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மை கிட்டும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக மேலதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் தொடரும். ஊதிய உயர்வினால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆதரவைப் பெற்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். 

விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி கூடுதல் விளைச்சல் காண்பீர்கள். கால்நடைகளால் நன்மை அடைவீர்கள். அரசியல்வாதிகள் உங்களுக்கு எதிராக வேலை செய்பவர்களை கண்டு பிடித்து பிரிந்து விடுவீர்கள். உட்கட்சிப் பூசல் தொடர்வதால் கவலை உண்டாகும். கலைத்துறையினருக்கு உங்களின் செயல் அனைத்தும் வெற்றியடையத் தொடங்கும். படைப்புகளால் மக்களையும் கவர்வீர்கள். 

பெண்மணிகளுக்கு வருமானம் போதிய அளவு வரும். சிக்கனத்தையும் நன்கு கடைப்பிடித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். மாணவமணிகள் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை உயர்த்துவீர்கள். பெற்றோர் சொற்படி கேட்டு நடக்கவும். 

பரிகாரம்: ஸ்ரீ நந்தகோபனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 21, 23. சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உற்றார் உறவினர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் கையிருப்பு பொருள்கள் மீது கவனம் செலுத்தவும். கடமை தவறாமல் உழைக்கவும். வியாபாரிகள் பிறரிடம் கடன் பெற்று வியாபாரத்தைப் பெருக்க நினைக்காதீர்கள். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளால் புதிய நிலம் குத்தகைக்கு எடுப்பீர்கள். சிறிதளவு வருமானம் கூடும். கால்நடைகளின் பராமரிப்பில் கவனம் செலுத்துங்கள். 

அரசியல்வாதிகளுக்கு உங்களது கெளரவம் சற்று பாதிக்கப்படும். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு புதுப் புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதிலும் பணவரவில் தாமதம் உண்டாகும். 

பெண்மணிகள் உறவுகள் மேம்பட விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். நாவடக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. மாணவமணிகள் அனைத்து பாடங்களையும் படித்தால் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியும். உடற்பயிற்சிகளில் கவனமாக ஈடுபடவும். 

பரிகாரம்: ஸ்ரீ சிவபெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 22, 23. சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதார நிலைமை சற்று மந்தமாக இருக்கும். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிச் செயல்படுவீர்கள். மிகவும் சிரமத்திற்கு இடையிலும் எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். 

உத்தியோகஸ்தர்கள் மனதை அரித்து வந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரிகளின் நம்பிக்கையையும் பெற்று விடுவீர்கள். வியாபாரிகள் கூட்டு வியாபாரத்தில் சற்று ஒதுங்கியே இருங்கள். வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். விவசாயிகள் கால்நடைகளின் மூலம் வருமானத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விளைபொருள்களை உடனுக்குடன் விற்பனை செய்து கொள்ளுங்கள். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். எதிர்க்கட்சியினரும் உங்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டார்கள். கலைத்துறையினருக்கு உங்கள் செயல்பாடுகளில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். மாணவமணிகளுக்கு பெற்றோரிடம் எதிர்பார்த்த அன்பும், ஆதரவும் கிடைக்கும். மிகுந்த உற்சாகத்துடன் தீவிரமாகப் படிப்பீர்கள். 

பரிகாரம்: மகான்களின் ஜீவசமாதியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 24, 25. சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சமூகத்தில் உயர்ந்தவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்களின் வேலைகள் சற்று தாமதமாகவே முடியும். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். துணிந்து செய்யும் செயல்களில் சற்று கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்கள் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் கவனமாக இருக்கவும். இடைவிடாது உழைக்க வேண்டிவரும். வியாபாரிகள் வரவுக்கு ஏற்ற செலவு செய்யவும். தற்போது வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணத்தை கைவிட்டு விடவும். விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். 

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம். கலைத்துறையினருக்கு பணவரவு தாமதமாக வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் வருவதிலும் மிகவும் சிரமம் ஏற்படும். 

பெண்மணிகளுக்கு கணவர் உங்களை மதித்து நடந்து கொள்வார். அனைவருடனும் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெற தீவிரமாக முயற்சி செய்யவும். 

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 21, 25. சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் திருமண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். ஆனாலும் வீடு மாற்றும் எண்ணத்தைத் தற்போது செயல்படுத்த வேண்டாம். பொறுமையுடன் உங்கள் காரியங்களை செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் நண்பர்களை அனுசரித்து நடந்து வியாபாரத்தை நன்கு விரிவுபடுத்துவீர்கள். புதிய யுக்தியால் முன்னேற்றமடைவீர்கள். விவசாயிகளின் கையிருப்பு பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். சமூகத்தில் சில கௌரவமான நிகழ்வுகளை சந்திப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட காலம் கனிந்து வரும். சக கலைஞர்களும் உதவுவார்கள். 

பெண்மணிகள் கணவரிடம் மிகவும் அனுசரணையுடன் நடந்து கொள்வீர்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவமணிகள் பொறுமையுடன் படித்து சிறந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: கோளறு பதிகம் படித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 23, 25. சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சற்று பணவரவு கூடும். எதிர்பார்த்த உதவிகளை உறவினர்களிடமிருந்து பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் பேச்சை சக ஊழியர்கள் மதித்து நடப்பார்கள். மேலதிகாரிகளின் கெடுபிடியால் சற்று வருத்தப்படுவீர்கள். வியாபாரிகள் உங்களின் வியாபாரத்தை கூட்டாளிகளுடன் சேர்ந்து விரிவுபடுத்துவீர்கள். லாபம் சற்று கூடும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளையும் நன்கு பராமரிப்பீர்கள். 

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். புதிய பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கலைத்துறையினர் ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள் மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் அரவணைப்பும் கூடும். அனைவரின் கனிவான வார்த்தைகளினால் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும். மாணவமணிகள் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவீர்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 21, 24. சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உடல் நலத்தில் மாற்றம் எதுவும் இராது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்துவதில் சற்று நெருக்கடி நிலைமை ஏற்படும். பெற்றோர்களிடம் விட்டுக்கொடுத்து சுமூகமாக பழகவும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் சுமூகமான நிலைமை ஏற்படும். வியாபாரிகள் கடன்களை வாங்கி புதிய கிளைகளை தைரியமாக திறக்கலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும். விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் வசூலாகும். பொருளாதார நிலைமை சீரடையும். கடின உடல் உழைப்பால் நல்ல லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய பதவியில் அமர்வீர்கள். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப் போன வாய்ப்புகள் திரும்பவும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவமணிகள் விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ பழனி ஆண்டவரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 22, 27. சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நீங்கள் எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது முடித்து விடுவீர்கள். அதேநேரம் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும். சரியான நேரத்தில் உணவும் தூக்கமும் தேவை என்பதை உணருங்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்னையின்றி முடியும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் மனம்திறந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த வருமானத்தை விட குறைவாகவே வரும். விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்கி விவசாயத்தில் ஈடுபடுவார்கள். கூலியாட்களையும் அரவணைத்து ஆதரவு கொடுப்பீர்கள். 

அரசியல்வாதிகளின் செயல்கள், பேச்சுகள் அனைத்தும் சரித்திரமாக மாறும். பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மேலோங்கும். புதுப் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்மணிகளுக்கு முன் கோபத்தை அடக்கிக் கொள்ளுங்கள். அனைவரிடமும் அன்புடன் பழகுங்கள். மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். உடல் நலத்திற்கு யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளவும்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்க நாதரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 22, 26. சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் கவலைகள் மறைந்து குடும்பத்தில் இன்பம் பெருகும்.செய்தொழிலில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சற்று செல்வாக்கு உயரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் நூதன முயற்சிகள் வெற்றி பெறும். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் பரிசீலிப்பார்கள். பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதன்படி செயல்படுவீர்கள். அதனால் வியாபாரம் பெருகும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளால் எதிர்பாராத பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் உயர்வீர்கள். 

அரசியல்வாதிகள் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்து வருவீர்கள். புதிய முயற்சிகளையும் தள்ளிப் போடாதீர்கள். கலைத்துறையினருக்கு தேவையற்ற பேச்சு, அணுகுமுறையால் சக கலைஞர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடலாம். கவனம் தேவை. 

பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகளுக்கு விளையாடும்போது காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். மற்றபடி பெற்றோரின் அறிவுரைகளை மதித்து நடக்கவும்.

பரிகாரம்: ஸ்ரீ மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 22, 27. சந்திராஷ்டமம்: 21.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் நிறைவேற மிகவும் சிரமப்படுவீர்கள். மன தைரியத்தை கூட்டிக்கொள்ள யோகா, பிராணாயாமம் போன்ற நல்ல விஷயங்களை மேற்கொள்ளவும். மற்றபடி தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். 

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் சுமாராகவே இருக்கும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். எவருக்கும் ஜாமீன் அளித்தல், கையொப்பமிடுதல் போன்றவற்றையும் தவிர்த்து விடவும். விவசாயிகளுக்கு சில புதிய உபகரணங்களை வாங்கி மகசூலை பெருக்குவீர்கள். கால்நடைகளால் லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் பேசும் பொழுது கடுமையான சொற்களை வீசாதீர்கள். அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கும். புதுப்புது ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். விளையாடும் நேரத்தில் தகுந்த பாதுகாப்புடன் விளையாடவும்.

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 21, 27. சந்திராஷ்டமம்: 22, 23.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்களின் மதிப்பு மரியாதை உயரும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும். இருப்பினும் உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும், சலுகைகளையும் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்கவும். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பொருளாதார மேன்மை அடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டு உறுதியுடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் குறைவு இருக்காது. சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். மாணவமணிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு உங்களை வழிநடத்திச் செல்லும். கல்வியில் முன்னேற்றுவதற்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். 

பரிகாரம்: ஸ்ரீ பார்வதி, பரமேஸ்வரரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 26, 27. சந்திராஷ்டமம்: 24, 25.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com