ஜோதிடரீதியாக உங்களின் வாழ்க்கைத் துணையை எங்கு, எப்போது முதலில் காண்பீர்கள்?

ஒருவரின் வருங்கால வாழ்க்கைத் துணையை எங்கு, எப்போது காணப்போகிறோம் என்பதை ஜோதிடம் எளிதாக உணர்த்தும்.
ஜோதிடரீதியாக உங்களின் வாழ்க்கைத் துணையை எங்கு, எப்போது முதலில் காண்பீர்கள்?

ஒருவரின் வருங்கால வாழ்க்கைத் துணையை எங்கு, எப்போது காணப்போகிறோம் என்பதை ஜோதிடம் எளிதாக உணர்த்தும். இது ஏதோ நான் கூறுவதாக நினைக்க வேண்டாம், அத்தனையும் நமது முன்னோர்கள், ஜோதிட விற்பன்னர்கள், ரிஷிகள் போன்றோர் கூறியது தான். சரி, அதனை விரிவாக இந்த கட்டுரையில் காணலாம். 

முதல் பார்வையில் கண்டவர்கள் எல்லோரும் வாழ்க்கைத் துணையாக வருவதில்லை. இருப்பினும் நம்மை அறியாமல் நமது வாழ்க்கைத் துணையை எங்கோ, எப்போதோ எந்த சூழலிலோ நிச்சயம் சந்தித்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதில் நெருங்கிய உறவினர் அல்லாமல் முன் பின் தெரியாத நபர்கூட இந்த விஷயத்தில் சம்பந்தம் நேர வாய்ப்பு உள்ளது. 

ஒருவர் ஆணாக இருப்பின் அவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையைக் கண்டும், அதுவே பெண்ணாக இருப்பின் குருவின் நிலையைக் கண்டும் இதனை எளிதாக காணலாம். இந்த குருவும், சுக்கிரனும் தான் ஒருவரின் வாழ்வில் வாழ்க்கைத் துணையாக வருவதை, எங்கு முதல் சந்திப்பு நிகழும் என்பதைத் தெரியப்படுத்தும் என்றால், அது மிகை ஆகாது.

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் முதல் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருப்பின், அவரின் வருங்கால கணவர் / மனைவியை அவரின் சுய முயற்சியால் மட்டுமே வெளியில் தேடி, அலைந்து காண முடியும்.

அதுவே, ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் இருந்தால், கடைத்தெருவில், பணப் பரிமாற்றம் செய்யும் இடத்தில் அல்லது நாட்டின் கிராமப்புற பக்கத்தில் காண வேண்டிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதுவே, ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் மூன்றாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் இருந்தால், இளம் பிராய பள்ளிக்கூடத்தில், அடிக்கடி பிரயாணம் செய்யும் போது, தமது உடன் பிறப்புக்கள் மூலம் ஏற்படும் தொடர்புகளால், அண்டை வீட்டு மக்களின் தொடர்பால்,  காண வேண்டிய வாய்ப்புகள் அதிகம். 

ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் நான்காம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு நான்காம் வீட்டில் இருந்தால், அன்றாட வீட்டு வாழ்க்கையின் மூலம், பெற்றோரால், அதிலும் முக்கியமாக கூறவேண்டுமானால், ஜாதகரின் தாயார் மூலமாக காண அதிக வாய்ப்பு உள்ளது.

ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் இருந்தால், அதிலும் ஐந்தாம்  வீடு என்பது வேடிக்கை / கேளிக்கையை குறிப்பதால், விடுமுறை நாட்களில், பொழுதுபோக்கு இடங்களில் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டு மூலம், காண வேண்டிய வாய்ப்புகள் உள்ளது.
 
ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் இருந்தால், ஆறாம் வீடு என்பது சேவையை குறிப்பது அதனால், தினசரி வீட்டு வேலை சம்பந்தம், பொழுது போக்குக்காக பங்கேற்கும் நிகழ்வுகள் தொடர்பாக, ஆயுதப் படைகள் சம்பந்தமாக காண வேண்டி வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் இருந்தால், ஏழாம் வீடு என்பது கூட்டு தொழில் , கூடி செய்யும் காரியம் போன்றவற்றை குறிப்பதால், திருமண நிகழ்வில் அல்லது தொழிலில் கூட்டு வைத்த நபர்கள் மூலமாக, காணும் வாய்ப்பு கிட்டும். 

ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு எட்டாம்  வீட்டில் இருந்தால், எட்டாம் வீடு என்பது பணம் சம்பந்தம், மறைத்து வைக்கப்பட்ட அனைத்து பொருள்களை குறிப்பதால், மற்றவர்களின் பணம் பரிமாற்றம் செய்யும் இடத்தில் மற்றும் அமானுஷ்யம் சக்தி மூலமாக  காண வேண்டி வரும். 

ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டில் இருந்தால், ஒன்பதாம் வீடு என்பது விரிவாக்கம் சம்பந்தம், அதாவது உடல் ரீதியாக, உடற்கல்வி , உடல் சிகிச்சை செய்யும் இடமாக இருக்க வாய்ப்பு. மேலும், உயர் கல்வி பயிலும் இடம், நீண்ட தொலைவு பிரயாணத்தின் போது , கனவில், மதம் சம்பந்தமான நிகழ்வுகள் நடை பெறும் இடங்கள் மூலமாக காணும் வாய்ப்புள்ளது. 

ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் இருந்தால், பத்தாம் வீடு என்பது வாழ்வின் நிலையைக் கூறும் இடம், அதாவது, தொழில் செய்யும் இடத்தில் அல்லது ஜாதகரின் தந்தை மூலமாக காண வேண்டி  வர அதிக வாய்ப்பு உள்ளது.

ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு பதினொன்றாம் வீட்டில் இருந்தால், பதினொன்றாம் வீடு என்பது சமூகம், சமூக வாழ்வில், கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் நண்பர்கள் மூலமாக காண வேண்டிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

ஒருவரின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் பன்னிரெண்டாம் வீட்டில் இருப்பின், அதாவது லக்னத்திற்கு பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால், பன்னிரெண்டாம் வீடு என்பது தனிமையைக் குறிக்கும், அதாவது, ஆன்மிக விஷயங்கள் நடக்கும் இடங்கள், அமைதியான யோகா, தியானம் செய்யும் இடங்கள், மருத்துவமனைக்குச் செல்லும் போது,  வெளிநாடுகளில் கால் பாதிக்கும் போது, காண வேண்டிய வாய்ப்புகள் வரும். 

மேலே கூறிய தகவல்கள் மிகக் குறைவே, கட்டுரையின் நீட்சி மற்றும் இது ஒரு ஜோதிட புரிதலுக்கானது மட்டுமே அன்றி முழு ஜோதிட பாடம் இல்லை என்பதனை உணரவும்.  ஒருவரின் ஜாதகத்தில் குருவோ அல்லது சுக்கிரனோ 7ஆம் பாவத்தை தொடும் அல்லது கடக்கும் போது இந்த வருங்கால துணைவரைக் காண முடியும். 

சந்திப்புகள் எப்படி, எப்போது நடந்தாலும் ஒரு சிலருக்கு அவர்களுடனேயே வாழ்நாள் முழுவதும் வாழமுடிவதில்லை அதற்கான காரணத்தையும் ஜோதிடம் முன்னதாகவே தெரிவிக்கிறது. அதனை ஆய்வு செய்து ஒரு ஜோதிடர் கூறுவார் எனில் அவர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கும். அதில் முக்கியமானது என்னவென்றால், ஜாதகம் பார்க்க வருபவர்களின் அவசரமும், முன்கூட்டியே அவர்கள் எடுத்த முடிவுக்கு, ஜோதிடர் சரி என்று மட்டுமே சொல்ல வேண்டும், என நினைப்பதை, என்னவென்று கூறுவது.

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com