மதுராந்தகத்தை அடுத்த புத்திரன்கோட்டை முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்யூர் வட்டம், புத்திரன்கோட்டை கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மகா சங்கல்பம், கணபதி ஹோமம், சுமங்கலி பூஜை, கன்யா பூஜை உள்ளிட்டவையும், புதன்கிழமை சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை மேளதாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, யாக சாலையில் இருந்து கலசப் புறப்பாடும், இதையடுத்து மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கருவறை மூலவர் சந்நிதிகளில், புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், இந்து சமய அறநிலைய இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், உதவி ஆணையர் க.ரமணி, கோயில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.