
தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பிரம்மாண்ட தீர்த்தக்குட ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்ற தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, தாரமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. அணைமேடு என்ற இடத்தில் சரபங்கா நதிக்கரையில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. யானை மற்றும் குதிரை முன்செல்ல 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கடும் வெயிலையும் பொருள்படுத்தாது சுமார் 7 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்த ஊர்வலம் கைலாசநாதர் கோயிலை அடைந்ததும், தீர்த்தக் குடங்களில் எடுத்துச் செல்லப்பட்ட புனித நீர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்துக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தாரமங்கலம் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. மின் விளக்கால் கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பணிக் குழு சார்பில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு பாதைகளிலும் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு மின் விளக்குகள், கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கும்பாபிஷேக விழாவில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.