இன்று பிரதோஷம். சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் குறைந்தது நான்கு தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும் பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் கடவுளைத் துதிக்கப் பலருக்கு நேரமில்லாமல் போகலாம். சிவாலயம் சென்று வழிபட முடியாத சூழ்நிலை உள்ளவர்கள்; சித்தத்தில் சிவபெருமானை நிறுத்தி, சிந்தை சிதற விடாமல் ஒரு நிலைப்படுத்தி, இறைவனின் திருநாமத்தை ஒருமுறை மனதில் நினைத்தாலும் போதும் என்கிறார் பட்டினத்தார்.
"வழிபிழைத்து நாமெல்லாம்
வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள்
எல்லாம் பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொரு
கால்வாய் ஆரச் சொல்லிக்
கருதிடத்தான் நில்லா கரத்து"
"ஞானம், கர்மம் பற்றிப் பேசும் புனித நூல்களின் வழி நாம் நடப்பதில்லை, நீதி நியாயம் பார்க்காமல் நெறிதவறிச் செயல்படுவோம், பழிவருமே என்று அஞ்சுவதில்லை,
ஆனால் நாம் திருவிடைமருதூர் சிவபெருமானின் திருநாமத்தை வாய்விட்டுச் செல்லாவிடினும், ஒருமுறை மனதில் எண்ணிய அளவே அத்தனை பாவமும் துன்பமும் நம்மை விட்டு ஓடி மறைந்து விடும்" என்கிறார் அடிகள்.