உத்திராயணத்தின் கடைசி மாதத்தில் பித்ருக்கள் ஆசி நிறைந்த அமாவாசை!

இன்று ஆனி அமாவாசை. சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யக்கூடிய தை 1 முதல், ஆனி 30 வரையிலான காலம் உத்திராயண
உத்திராயணத்தின் கடைசி மாதத்தில் பித்ருக்கள் ஆசி நிறைந்த அமாவாசை!
Updated on
5 min read

இன்று ஆனி அமாவாசை. சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யக்கூடிய தை 1 முதல் ஆனி 30 வரையிலான காலம் உத்திராயண புண்ணிய காலம் எனப்படும். நமக்கு ஒரு வருடம் என்பது  தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தட்சிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் தை மாதம் என்பது தேவர்களின் சூரியோதய காலமாகிய காலைப் பொழுதாகும். ஆனி மாதம் என்பது தேவர்களின் இரவுப் பொழுது ஆரம்பிப்பதற்குமுன் உள்ள கோதூளி லக்ன காலமாகும். உத்திராயண புண்ணிய காலத்தின் கடைசி அமாவாசையான இன்று ராமேஸ்வரம், திருவெண்காடு,  கோடியக்கரை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் தர்பணம் செய்யவும், கடல் நீராடவும் மக்கள் திரளாக கூடுகின்றனர். அனேக ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

உத்தம வாழ்வு தரும் உத்திராயணம்

இக்காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம்) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம். பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார். தெற்கு  நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலமான ஆடி 1 முதல் மார்கழி 30 வரையான தட்சிணாயனம் எனப்படுகிறது. உத்திராயணத்திற்கு இணையான சிறப்பு இக்காலத்தில் இல்லை. சுபகாரியங்கள் செய்வதற்கு  உத்தராயண காலமே சிறந்தது.  

ஆனி அமாவாசை

சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதுர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் நாளையே அமாவாசை என ஜோதிட நூல்கள்  கூறுகின்றன. மிதுன ராசியில் புதனின் வீட்டில் சூரியன் சந்திரனுடன் சேர்வது மிகவும் விசேஷமான ஆனி அமாவாசையாகும். அதிலும் உத்திராயண புண்ய காலத்தில் வரும் கடைசி அமாவாசை  என்பதால் கூடுதல் சிறப்பாகும்.

சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் முன்னோர்கள்

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிறபோதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில்தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். பித்ரு தேவர்களைச் சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பதும், பித்ரு கடன்  செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறும் என்பதும், பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்துவிடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை. 

அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்றுகொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தர வேண்டும். இதனால் அவர்கள் மனம்  மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது. 

முன்னோர்களின் ஆசி

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழத் துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள்தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது  சிரார்த்தம் என்று பெயர். நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

வசு ருத்ர ஆதித்தியர்கள்

பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ் – வாயு போன்ற லேசான  பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.

பித்ரு தோஷம்

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம்  செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும்  நன்மைகள் உண்டாகும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதேதோ காரணங்களால் கொலை அல்லது தற்கொலை மற்றும் விபத்தினால் அகால மரணம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி  செயற்கையான முறையில் இறந்தவர்ளுக்கு முறையாக கர்ம காரியங்களைச் செய்து அந்த ஆத்மாவை கரை சேர்ப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்தம் ஆகியன செய்ய  வேண்டும். அவ்வாறு செய்யாமல் விடும்போது அந்த ஆத்மாக்கள் நற்கதி அடையமுடியாமல் பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்திர தோஷங்களாக வடிவெடுத்து, நமது பிறக்கும் நேரத்தில் ராகு மற்றும் கேதுவாக திரிகோணங்களில் அமர்ந்துவிடுகின்றன.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணியம் ஆகும். அதே ஐந்தாமிடம்தான் அவர்களுடைய சிந்தனை ஸ்தானம், புத்திர ஸ்தானம், குலதெய்வ ஸ்தானம், மனஉறுதி ஸ்தானம் ஆகும். இங்கே ராகு அல்லது கேது இருக்க ஒரு ஆணோ பெண்ணோ பிறந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். திருமணம்  தடை, குழந்தையின்மை, தெய்வானுக்ரஹம் இல்லாத நிலை, பூர்வீக சொத்துக்களில் பிரச்சனை மற்றும் வில்லங்கம், தீராத நோய், அடிக்கடி சண்டை போன்றவை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எத்தனை கோயில்களுக்குச் சென்று அன்னதானம், ஆடை தானம், பசு தானம், ருத்ராட்ச தானம், தண்ணீர் தானம், விளக்கு தானம், கும்பாபிஷேகம் செய்தாலும் பலன் கிடைக்காது. நம் நிம்மதியைக் குலைத்துவிடும்  என்கிறது சாஸ்திரம். திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற   வாழ்க்கையைத் தந்துவிடும்.

இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாகக் கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால்  அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி சூன்ய தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய  முடியும். மருந்து உன்னுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விஷயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும்  அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், களத்திர தோஷம், மாங்கல்ய  தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது. 

ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?

1. பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்தக் கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பித்ரு தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை  அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

2.  பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஸர்ப கிரஹங்களின் சேர்க்கை பெற்று நிற்பது, ராகு மற்றும் கேதுவின் அச்சில் சூரியனோ அல்லது  சந்திரனோ பாப கர்த்தாரி யோகம் பெற்று நிற்பது.

3. சூரியன் மற்றும் சந்திரனுக்கு கிரஹண தோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை  பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

4. ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலையும் பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனீஸ்வர பகவான் பித்ரு ஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பத்தில் அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு  குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.

பித்ரு தோஷ பரிகாரங்கள்

1.  ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட ஸ்ரார்தம் செய்வது பித்ரு  தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.

2. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - சவுந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும்  ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். திருப்பூவனத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். காசியை காட்டிலும் வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.

3. திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி

திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா,  திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள்  சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.
 
இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி  செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

4. பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில்  தர்ப்பணம், ஸ்ரார்தம் செய்து "தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" எனக்கூறி வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம்  முழுமையாக நீங்கும்.

புனிதமான ஆனி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில்  வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி  வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை. 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com