சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவையொட்டி கோமதி அம்பாள் தேரோட்டம் புதன்கிழமை (ஜூலை 25) காலை நடைபெறுகிறது.
சங்கரன்கோவிலில் ஆடித் தவசுத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 6ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கோமதி அம்பாள் யோகாசனம், ஆத்மார்த்த பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இரவில் கனகதண்டிகை வாகனத்தில் கோமதி அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
7ஆம் திருநாளான திங்கள்கிழமை காலை கோ சம்ரஷண அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவில் முற்றிலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மண்டகப்படியில் இருந்து புறப்பட்டு வீதியுலா வந்தார்.
தேரோட்டம்: 9ஆம் திருநாளான ஜூலை 25 ஆம் தேதி புதன்கிழமை காலை கோமதி அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருளுகிறார். அப்போது சிறப்புத் தீபாராதனை நடைபெறும். இதைத் தொடர்ந்து, 9 மணிக்குமேல் தேரோட்டம் நடைபெறும்.
ஆடித் தவசுக் காட்சி: 11ஆம் திருநாளான ஜூலை 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆடித் தவசுக் காட்சி நடைபெறும். அப்போது சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராகவும், பின்னர் இரவு 9 மணிக்கு அதே இடத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாகவும் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தவசுக் காட்சி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










