திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமையான நேற்று கோயில் யானை மசினிக்கு திடீரென மதம் பிடித்து பாகனை மிதித்துக் கொன்றது.
பாகனை யானை மிதித்துக் கொன்றதால், கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் திருக்கோயிலின் மற்ற கோபுர வாயில்கள் வழியாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக கோயில் நடை அடைக்கப்பட்டடு தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.
திருக்கோயிலுக்குள் இறப்பு நிகழ்ந்திருப்பதால் ஆகம விதிகளின்படி புண்ணியதானம், பரிகார ஹோம சாந்திகள் நடத்தப்பட்டு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது.
பாகனை கொன்ற அதிர்ச்சியில் இருந்து பக்தர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாததால், கோயிலுக்குள் பக்தர்கள் கூட்டம் இன்றி கோயில் விரிச்சோடி இருந்து வருகின்றது.
இதுவரை சந்திரகிரகணம், சூரியகிரகணம் போன்றவற்றுக்காக குறிப்பிட்ட நேரத்தில் அம்மன் சன்னதி மூடப்பட்டிருக்கும். ஆனால், கோயிலுக்குள் இறப்பு நிகழ்ந்திருப்பதால், பூஜைகளும் பரிகாரங்களும் செய்ய வேண்டியிருப்பதால் கோயில் நடை நாள் முழுவதும் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்று கோயில் குருக்கள் கூறியுள்ளார்.
கோயில் யானை மசினியை பரிசோதிக்க கோவையில் இருந்து மருத்துவர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.