கோயில் திருவிழா கலை நிகழ்ச்சி குறித்த சுற்றறிக்கை: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை போலீஸார் விடியோ பதிவு செய்வது தொடர்பாக, காவல் நிலையங்களுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பிய
கோயில் திருவிழா கலை நிகழ்ச்சி குறித்த சுற்றறிக்கை: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
Updated on
1 min read

கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை போலீஸார் விடியோ பதிவு செய்வது தொடர்பாக, காவல் நிலையங்களுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பிய தமிழக காவல் துறை டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களின் போது ஆடல், பாடல் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி பலர் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த மனுவில், தங்களது பகுதியில் உள்ள கோயில்களில் கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் நடன நிகழ்ச்சிகள் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ஆபாச நடனம் நடப்பதாகக் கூறி அனுமதி வழங்க போலீஸார் மறுக்கின்றனர். எனவே, தங்களது கோயில்களில் கலாசார நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் திருவிழாக்களின்போது கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் அந்த நிகழ்ச்சிகளை உள்ளூர் போலீஸார் விடியோ பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை அந்த நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் தமிழக காவல் துறை டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் ஏ.பாலமுருகன், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகக் கூறி, அந்த சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 
பாராட்டு: உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களில் அந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனைப் படித்து பார்த்த நீதிபதி, தமிழக காவல் துறை டிஜிபி ராஜேந்திரனின் செயலைப் பாராட்டினார். உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்றி சுற்றறிக்கை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது எனத் தெரிவித்த நீதிபதி, கோயில் கலை நிகழ்ச்சிகளை தவறாமல் விடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com