சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ம் தேதியான இன்று மாலை அணிவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட ஏதேனும் காரணத்தால் மாலை அணிய முடியாவிட்டால், கவலைப்பட வேண்டியதில்லை. சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திர நாளில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கலாம்.
அருகில் உள்ள கோயில் அர்ச்சகர் அல்லது குருசாமி கையினால் மாலை அணிந்துகொள்ளலாம். ருத்திராட்ச மாலையோ அல்லது துளசி மணி மாலையோ அணியலாம். மாலை அணிந்து கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து சுவாமிகளை வணங்க வேண்டும். 41 நாட்கள் விரதம் இருப்பது உத்தமமானது.
ஐயப்ப மாலை அணிபவர்கள் பின்பற்ற வேண்டியவை..
• ஐயப்ப பக்தர்கள் என்பதை தனித்துவப்படுத்துவதற்கு கருப்பு அல்லுது நீல நிற ஆடையே அணிந்துகொள்ள வேண்டும்.
• மாலை அணிபவர்கள் செருப்பு அணியக்கூடாது.
• கட்டில், மெத்தையில் படுத்து உறங்கக்கூடாது.
• தலையணை பயன்படுத்தக்கூடாது.
• மாமிசம் மற்றும் மதுபானம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
• மற்றவர்களுக்கு தீங்கு உண்டாக்கக்கூடிய செயல்களை செய்தல் கூடாது.
• பொய் சொல்லுதல், பொறாமை, ஆசை, தாம்பத்யம் ஆகியவை தவிர்க்க வேண்டும்.
• வீட்டில் மரணம் ஏற்படும்பட்சத்தில் மாலையைக் கழற்றிவிட வேண்டும். அந்த ஆண்டு மலைக்குச் செல்லக்கூடாது.
• பணி காரணமாக வெளியில் செல்லும் பக்தர்கள் சாலையில் மரண ஊர்வலத்தைக் காண நேர்ந்தால் வீட்டிற்கு வந்து கோமியம் தெளித்து நீராடிவிட்டு அதன்பிறகே பூஜை செய்ய வேண்டும்.
• சபரிமலைக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போது வீட்டையோ மனைவி, குழந்தைகளையோ, பெற்றோரையோ திரும்பிப் பார்க்காமல் கிளம்ப வேண்டும்.
• மலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் விரதமிருக்காமல் பம்பைக்கு சென்று மாலை அணிந்து 18 படி ஏறுதல் பாவமாகும்.
• முன்னதாகவே மாலைக்குச் செல்பவர்கள் ஊர் திரும்பிய பிறகும், மகரவிளக்கு காலம் முடியும் வரை தொடர்ந்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.