திருப்பதியில் செப்டம்பர் மாதம் பிரம்மோற்சவ விழா துவங்க உள்ளதால் மாற்றுத் திறனாளிகள் உட்பட எட்டு வகையான வழிபாட்டுத் தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது வருடாந்நிர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வைதீக நாள்காட்டியின்படி அதிக மாதங்கள் உள்ளதன் காரணமாக செப்டம்பரில் வருடாந்திர பிரம்மோற்சவம், அக்டோபரில் நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு விழாக்கள் நடைபெற உள்ளன.
செப்டம்பர் 11-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்கிற தூய்மைப் பணி, 12-ம் தேதி அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 13-ம் தேதி மாலை திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் திருமலையில் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு வருவார்கள் என்பதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், பரிந்துரை கடிதங்களுக்கு அளிக்கப்படும் தரிசனங்கள், நன்கொயாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனங்கள், ராணுவ வீரர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் ஆர்ஜித சேவை தரிசனங்கள் உள்ளிட்ட 8 வகையான வழிபாட்டுத் தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, திருமலைக்கு வரும் பக்தர்கள் இதனைக் கருத்தில் கொண்டு தரிசனத்துக்கு வரவேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.