புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களும் சிரத்தையுடன் விரதம் இருந்து அமாவாசையன்று நம் மூதாதையருக்குத் தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண்புகளையும் தரவல்லது.
எனவே, தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் மறைந்த மூதாதையரின் படம் இருக்குமானால் அதன்முன் தினமும் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.
பழவகைகளில் ஏதாவது ஒன்றினை தினமும் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்குத் தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்குப் படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாகப் போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர்களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு ஆடை தானம் செய்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.
மூதாதையரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென்கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.
காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானரோருவர் ஆகியவை திதி தர ஏற்ற இடங்கள் ஆகும். தமிழகத்தில் ராமேஸ்வரம், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய ஆலயங்கள் மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பிண்டம் பிடித்து தர்ப்பணம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.