திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துவாதசியையொட்டி இன்று தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
சொர்க்கவாசல் திறந்து ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்தியாக சொர்க்கவாசலில் ஏழுந்தருளினார். அதன்பின் காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நேற்று காலை 9 மணியளவில் மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைதொடர்ந்து இன்று துவாதசியையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.